அதிமுக முன்னாள் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் மற்றும் அவரது நெருங்கிய உறவினர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். ரூ.58 கோடிக்கும் மேல் சொத்து குவித்ததாக எழுந்த புகாரின் பேரில், ரெய்டு நடந்து வருகிறது.

இவரது தொடர்புடைய சென்னை, தஞ்சை, திருவாரூர், திருச்சி, மன்னார்குடி, கோவை, உள்ளிட்ட 49 இடங்களில் லஞ்ச ஒழிப்பு படையினர் ரெய்டு நடத்துகின்றனர். காமராஜின் வீடு, அலுவலகம் மற்றும் அவருக்கு சொந்தமான 20க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடக்கிறது.

இவரது மகன்கள் இன்பன், இனியன், மற்றும் உறவினர்கள் சந்திரசேகரன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது வீடுகள் மற்றும் அவருக்கு தொடர்பான அலுவலகங்கள், காமராஜின் மைத்துனர் ஆர்ஜி குமார் வீடு, காமராஜின் மனைவியின் தங்கை ஆண்டாள் வீடு, வழக்கறிஞர் உதயகுமார் வீடு, ராஜாளி குடிகாடு லோக அறிவழகன் வீடு, மூவாநல்லூர் அறிவழகன் வீடு, காமராஜின் நண்பர் சம்பத்குமாரின் வீடு, மன்னார்குடியில் தியாகு வீடு, முன்னாள் நகர்மன்ற துணை தலைவர் டி.என்.பாஸ்கரன் வீடு, பைங்காநாடு ஜெயலலிதா மாவட்ட பேரவை பொருளாளர் ராதாகிருஷ்ணன் வீடுகளில் சோதனை நடக்கிறது.

இந்த ரெய்டுக்கு முன்னாள் முதல்வரும், எதிர்கட்சி தலைவருமான பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். ‘‘இது அரசியல் ரீதியாக எதிர்கொள்ள முடியாமல் காழ்ப்புணர்ச்சி காரணமாக ரெய்டு நடத்தப்படுகிறது’’ இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இந்த ரெய்டு குறித்து அமைச்சர் காமராஜுக்கு நேற்றே ரகசிய தகவல் கிடைத்ததால், சென்னை பயணத்தை கடைசி நிமிடத்தில் ரத்து செய்துவிட்டு, ‘மற்ற’ ஏற்பாடுகளை செய்ததாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal