நடிகை சுனைனா மருத்துவமனையில் சிகிச்சை பெறும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகி ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்தில் சுனைனா கதையின் நாயகியாக நடித்து வெளியான ரெஜினா பட விழாவில் பேசிய போது, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘சந்திரமுகி’ திரைப்படத்தை பார்த்த பின்பு தான் நடிகையாக வேண்டும் என்கிற ஆசை தனக்குள் வந்ததாக கூறி ஆச்சரியப்படுத்தினார். அதன் பின்னர், கஜினி உள்ளிட்ட படங்களை பார்த்த பின்னர் தென்னிந்திய நடிகையாக மாற வேண்டும் என்கிற ஆசை வந்ததாக கூறியிருந்தார்.

அந்த வகையில் தமிழில், கடந்த 2008 ஆம் ஆண்டு பி.வி. பிரசாத் இயக்கத்தில் சைக்கோலஜி திரில்லராக வெளியான ‘காதலில் விழுந்தேன்’ படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். இவர் நடித்த முதல் படமே இவருக்கு சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. இந்த படத்தில் நடிகை தேவயானியின் தம்பி நகுல் தான் ஹீரோவாக நடித்திருந்தார். மேலும் நகுல் – சுனைனா கெமிஸ்ட்ரிக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால், தன்னுடைய இரண்டாவது தமிழ் படமான மாசிலாமணி படத்திலும் இருவரும் மீண்டும் ஜோடி சேர்ந்தனர்.

இதை தொடர்ந்து யாதுமாகி, வம்சம், பாண்டி ஒலிபெருக்கி நிலையம், திருத்தணி, நீர்ப்பறவை, சமர், வன்மம், தெறி போன்ற படங்களில் நடுத்தடுத்து நடித்தார். ஆனால் இவர் நடித்த பல படங்கள் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் தோல்வியை தழுவியதால், சுனைனாவுக்கு தமிழில் வாய்ப்புகள் குறைய துவங்கியது. ஒரு சிறு பிரேக்குக்கு பின்னர், இவர் நடித்த சில்லு கருப்பட்டி படத்தில் இவரின் நடிப்பு ரசிகர்களை அதிகம் கவர்ந்தது. தற்போது தொடர்ந்து நல்ல கதைக்களம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடித்து வரும் சுனைனா, சமீபத்தில் கதையின் நாயகியாக ‘ரெஜினா’ படத்தில் நடித்திருந்தார். ஆனால் இப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது.

இது ஒருபுரம் இருக்க, தற்போது சுனைனா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மருத்துவமனையில், கையில் டிரிப்ஸ் ஏறிக்கொண்டிருக்க மூக்கில் ஆக்ஸிஜன் டியூப்புடன் படுத்திருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு. என்னக்கு கொஞ்சம் அவகாசம் கொடுங்கள்… திரும்பி வந்துவிடுவேன் என கூறியுள்ளார். இந்த போட்டோ ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆக்ஸிஜன் செலுத்தும் அளவுக்கு உடல்நிலை சரியில்லை என்றால், சுயநினைவை இழக்கும் அளவிற்கு அவரது உடல்நிலை சென்றதா? என பல்வேறு விதமான யூகங்களை கிளப்பி வருகின்றனர். மேலும் இவருக்கு என்ன ஆனது என தகவல்கள் தற்போது வரை வெளியாகவில்லை என்றாலும், ரசிகர்கள் விரைவில் சுனைனா நலம் பெற தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal