கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தாமதமாக தொடங்கிய போதிலும், கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக அங்கு கனமழை பெய்து வருகிறது. இதனால் பல மாவட்டங்களில் குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் தொடர்ந்து முகாமிட்டு வெள்ளத்தில் சிக்கி தவிப்பவர்களை மீட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கேரளாவில் மழைக்கு இதுவரை 10-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வந்த போதிலும் கோட்டயம், ஆலப்புழா, பத்தினம்திட்டா ஆகிய மாவட்டங்களில் கோட்டயம், குட்டநாடு, திருவல்லா ஆகிய தாலுக்காக்களில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.

கோட்டயம் மாவட்டத்தில் சங்கனாச்சேரி, வைக்கம் தாலுகாக்களில் தற்காலிக நிவாரண முகாம்களாக மாற்றப்பட்டுள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. அதே போல் பத்தனம்திட்டா மாவட்டத்திலும் நிவாரண முகாம்களாக செயல்படும் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார். கேரள மாநிலத்தில் பெய்து வரும் மழை காரணமாக அங்கு டெங்கு மற்றும் எலிக்காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனால் அவற்றை தடுக்க சுகாதாரத்துறை தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் மக்களும் கவனமாக இருக்குமாறு சுகாதாரத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

கேரளாவில் கனமழை பெய்யத் தொடங்கியதில் இருந்தே அங்குள்ள கடல் பகுதியில் தொடர்ந்து சூறைக்காற்று வீசி வருகிறது. இந்நிலையில் இன்று அதிகாலை திருவனந்தபுரம் முதலை பொழியில் மீன்பிடி படகு கவிழ்ந்தது. அதில் இருந்த 4 மீனவர்கள் கடலுக்குள் மூழ்கினர். இதுகுறித்து தகவல் அறிந்த கடலோர காவல் படையினர் ரோந்து படகில் சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது கடலில் மூழ்கிய மீனவர்களில் ஒருவரான புதுக்குறிச்சியைச் சேர்ந்த குஞ்சுமோன் என்பவர் பிணமாக மீட்கப்பட்டார். மற்ற 3 பேர் என்ன ஆனார்கள் என்பது தெரியவில்லை. அவர்களை கடலோர காவல் படையினர் மற்றும் மீனவர்கள் படகுகளில் சென்று தீவிரமாக தேடி வருகின்றனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal