இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றால் தேர்தலில்¢ போட்டியிட தடை விதிப்பதோடு, அரசு சலுகைகளையும் வழங்கக்கூடாது என அஜித்பவார் வலியுறுத்தியிருக்கிறார்!

தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவரும், மகாராஷ்டிரா சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான அஜித்பவார் நேற்று புனே பாராமதியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசியதாவது:-

‘‘ நாடு சுதந்திரம் அடைந்தபோது மக்கள் தொகை 35 கோடியாக இருந்ததாக எனது தாத்தா என்னிடம் அடிக்கடி கூறுவார். ஆனால் தற்போதைய மக்கள் தொகை 142 கோடி. சீனாவை முந்தி விட்டோம். இதற்கு நாம் அனைவரும் தான் பொறுப்பு. நமது நாடு, மாநிலங்கள் முன்னேற்றத்திற்காக ஒவ்வொருவரும் ஒன்று அல்லது இரண்டு குழந்தைகளை பெற்ற பிறகு நிறுத்த வேண்டும்.

மகாராஷ்டிராவில் விலாஸ்ராவ் தேஷ்முக் முதல்-மந்திரியாக இருந்தபோது, உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் 3 குழந்தைகளை பெற்றால் தகுதியற்றவர்களாக இருப்பார்கள் என்ற முடிவு எடுக்கப்பட்டது. அப்போது இந்த முடிவுக்காக நாங்கள் பயந்தோம். எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் விஷயத்தில் ஏன் இது போன்ற முடிவை எடுக்கவில்லை என்று மக்கள் கேட்கிறார்கள். நான் அவர்களிடம் சொல்கிறேன், அது எங்கள் கையில் இல்லை. அது மத்திய அரசின் கையில் உள்ளது. அதை மத்திய அரசு செய்ய வேண்டும்.

2 குழந்தைகளுக்கு மேல் பெறுபவர்களுக்கு எந்த சலுகையும் வழங்கக்கூடாது. எம்.பி., எம்.எல்.ஏ. தேர்தலிலும் போட்டியிட அனுமதிக்கக்கூடாது. அவர்களுக்கு சலுகைகள் மறுக்கப்பட்டால், மக்கள் இந்த விவகாரத்தில் அதிக விழிப்புணர்வுடன் இருப்பார்கள்’’ இவ்வாறு அவர் பேசினார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal