இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் ஆண்டுக்கு 2 முறை செயற்குழுவையும், ஒரு முறை பொதுக்குழுவையும் கூட்ட வேண்டும் என்ற விதிமுறை உள்ளது.

அந்த வகையில், கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11-ந் தேதி கூடிய அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில், கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த நிலையில், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தல் கடந்த மாதம் (மார்ச்) நடைபெறுவதாக இருந்தது. ஆனால், எடப்பாடி பழனிசாமி ஒருவர் பெயரில் மட்டுமே அனைத்து மனுக்களும் தாக்கலாகி இருந்ததால், போட்டியின்றி அவர் தேர்வாகும் நிலை ஏற்பட்டது.

ஆனால், அதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்து இருந்ததால், தீர்ப்பு வரும் வரை தேர்தல் முடிவை அறிவிக்கக்கூடாது என்று உத்தரவிடப்பட்டிருந்தது. இந்த நிலையில், கடந்த மாதம் 28-ந் தேதி காலை எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாக தீர்ப்பு வந்ததைத் தொடர்ந்து, அன்று மாலையே அவர் கட்சியின் 7-வது பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு, பதவி ஏற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து, வரும் 7-ந் தேதி (வெள்ளிக்கிழமை) கட்சியின் தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது, அந்த கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனால், அதே நாளில் அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

‘‘அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் வருகின்ற 7-ந் தேதி (வெள்ளிக்கிழமை) பகல் 12 மணிக்கு சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழகம் எம்.ஜி.ஆர். மாளிகையில், கட்சியின் அவைத்தலைவர் அ.தமிழ்மகன் உசேன் தலைமையில் நடைபெறும்.

இந்த கூட்டத்தில் கட்சியின் செயற்குழு உறுப்பினர்களான தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், பிற மாநில செயலாளர்கள், பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் (மகளிர்) அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும். தலைமைக் கழக செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் 7-ந் தேதி நடைபெறும் என தலைமைக் கழகத்தால் வெளியிடப்பட்ட அறிவிப்பு ரத்து செய்யப்படுகிறது’’ இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இந்த கூட்டத்தில் மொத்தம் 250 முதல் 300 பேர் வரை பங்கேற்பார்கள் என தெரிகிறது. கூட்டத்தில், அ.தி.மு.க.வை பலப்படுத்துவது குறித்தும், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலுக்கு தயாராவது குறித்தும், கூட்டணி குறித்தும் பேசப்பட இருப்பதாக கூறப்படுகிறது. அ.தி.மு.க. பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்ட பிறகு, முதல் முறையாக செயற்குழு கூட்டம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal