ஆவின் முறைகேடு புகார் தொடர்பாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் தம்பி ஓ.ராஜாவின் பதவி பறிக்கப்பட்ட சம்பவம்தான் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

முன்னாள் முதலமைச்சர் .ஓ.பன்னீர் செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சியில் இருந்த போது பல்வேறு புகார் காரணமாக ஓ.ராஜா அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். இதனையடுத்து மன்னிப்பு கேட்டதை தொடர்ந்து அதிமுகவில் இணைத்துக்கொள்ளப்பட்டார். இந்த நிலையில் கடந்த ஆண்டு சசிகலாவை சென்று ஓ.ராஜா சந்தித்து தனது ஆதரவை தெரிவித்து இருந்தார். இதன் காரணமாக அதிமுகவில் இருந்து ஓபிஎஸ்- இபிஎஸ்யால் நீக்கப்பட்டார். இந்தநிலையில் தேனி ஆவின் நிர்வாக குழு தலைவராக இருந்தவர் ஓ.ராஜா, இந்த ஆவின் குழுவில் தேனி மாவட்டத்தில் 400க்கும் மேற்பட்ட பால் உற்பத்தியாளர்கள் சங்கங்களில் இருந்து தினமும் 1 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து மதுரை உள்ளிட்ட பிற மாவட்டங்களுக்கு அனுப்பட்டு வருகிறது.

இந்த ஆவின் நிர்வாக குழு தலைவராக முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வத்தின் தம்பி ஓ.ராஜா தேர்வு செய்யப்பட்டார். இந்தநிலையில் தேனி ஆவினுக்கு 2019ல் புதிய நிர்வாக குழு உறுப்பினர்களாக 17 பேர் தேர்வாகினர். ஓ.ராஜாவின் பதவி காலத்தில் தேனி ஆவினில் துணைமேலாளர், டிரைவர், அலுவலக உதவி யாளர் உள்ளிட்ட 38 பேர் புதிதாக பணி நியமனம் செய்யப்பட்டனர். புதிய பணி நியமனத்தில் கூட்டுறவு விதிமுறைகள் பின்பற்றவில்லை என புகார் எழுந்தது. மேலும் பணி நியமனம் பணம் பெற்று நிரப்பப்பட்டதாகவும் கூறப்பட்டது. இதனையடுத்து புதிதாக பணியில் சேர்ந்த 38 பேர் நியமனம் ரத்து செய்யப்பட்டது.

இந்த முறைகேடு புகார் தொடர்பாக தேனி ஆவின் நிர்வாக சீர்கேடு குறித்து தலைவர் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்களுக்கு விளக்கம் கேட்டு கடந்த மாதம் கூட்டுறவு துறை நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இந்தநிலையில் ஓ.ராஜாவை தலைவராக கொண்டு ஆவின் நிர்வாக குழுவின் பதவிக்காலம் ஆகஸ்ட் 2023 வரை உள்ள நிலையில் குழுவை கலைத்து பால்வளத் துறை ஆணையர் சுப்பையன் உத்தரவிட்டுள்ளார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal