கணவரை கொல்ல திட்டம் போட்ட சீரியல் நடிகை, நண்பருடன் கம்பி எண்ணிக்கொண்டிருக்கும் சம்பவம்தான் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கோவை பொள்ளாச்சி அருகில் உள்ள டி நல்லகவுண்டன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். இவர் அந்த பகுதியில் உள்ள குளிர்பான கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவருக்கும் கோவை பீளமேட்டை சேர்ந்த ரம்யாவுக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு தற்போது இரு குழந்தைகள் உள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு கணவன் மனைவி இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தெரிகிறது.

இதனால் ரம்யா குழந்தைகளை அழைத்துக் கொண்டு பீளமேட்டில் உள்ள தனது அம்மா வீட்டிற்கு சென்றுவிட்டார். சினிமா மீது இருந்த மோகம் காரணமாக கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த டேனியல் என்ற சந்திரசேகர் என்பவருடன் ரம்யாவிற்கு பழக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது. டேனியல் மூலம் ரம்யாவுக்கு சீரியலில் துணை நடிகை வாய்ப்பு கிடைத்தது.

அதன்படி அவர் சுந்தரி, கண்ணெதிரே தோன்றினாள் சீரியலில் நடித்து வருகிறார். இந்த நிலையில் குழந்தைகளை தனது தாய் வீட்டில் ரம்யா விட்டு சென்ற நிலையில் குழந்தைகளை பார்க்க ரமேஷ் வீட்டுக்கு சென்றுள்ளார். இந்த நிலையில் ரம்யா தனது கணவர் குடித்துவிட்டு கொடுமைப்படுத்துவதாகவும் அவரை எப்படியாவது ஒழித்துக் கட்ட வேண்டும் என்றும் டேனியலிடம் கூறி அழுதுள்ளார்.

இதையடுத்து நேற்று முன் தினம் இரவு ரம்யாவும் ரமேஷும் இரு சக்கர வாகனத்தில் சென்றிருந்தார்கள். அப்போது அடையாளம் தெரியாத மர்மநபர்கள் இரு சக்கர வாகனத்தில் மோதியுள்ளனர். இதில் ரமேஷும் மற்றொரு பைக்கில் வந்தவரும் கீழே விழுந்தனர். அப்போது அந்த மர்ம நபர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ரமேஷின் கழுத்து, கை, கால், தலைபகுதிகளில் குத்திவிட்டு தப்பியோடிவிட்டார்.

இதையடுத்து படுகாயங்களுடன் ரமேஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து ரமேஷ் பொள்ளாச்சி தாலுக்கா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ரமேஷ் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் ரம்யாவின் செல்போனை ஆய்வு செய்த போது செல்போன் அழைப்புகளின் மூலம் அவர் ரமேஷை கொலை செய்ய திட்டமிட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து ரம்யா மற்றும் டேனியல் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார் அவர்களை கைது செய்தனர். இருவரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal