கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், மத்திய சுகாதாரத்துறை செயலாளர், மாநில சுகாதாரத்துறை செயலாளர்களுடன் இன்று ஆலோசனை நடத்த இருக்கிறார்!

கொரோனா பாதிப்பு காரணமாக இரண்டு ஆண்டுகள் மக்கள் வீடுகளுக்குள் முடங்கி இருந்து தற்போது தான் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளனர். இந்தநிலையில் நாடு முழுவதும் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நாள் ஒன்றுக்கு 100க்கும் குறைவாகவே பாதிப்பு பதிவு செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது கொரோனா பாதிப்பு தீவிரம் அடைந்து உள்ளது. குறிப்பாக கேரளா, மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்தநிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் நாடு முழுவதும் 1805 பேர் கொரோனா பாதிப்பால் பாதிக்கப்பட்டுள்ளனர். தினசரி கொரோனா தொற்று விகிதம் 3.19%ஆக உள்ளது. கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 300ஆக உயர்ந்துள்ளது.

அதே நேரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 937 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். தமிழகத்தை பொறுத்தவரை நேற்று மட்டும் 99 பேருக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது 582 பேர் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தநிலையில் நாடு முழுவதும் உள்ள ஆஸ்பத்திரிகளில் கொரோனா பரவலை எதிர்கொள்ளும் விதத்தில் ஆஸ்பத்திரிகளின் தயார் நிலையை சோதித்து அறிய வருகிற 10 மற்றும் 11-ந்தேதிகளில் ஒத்திகை நடத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

மேலும் இன்று மாலை அனைத்து மாநில சுகாதாரத்துறை செயலாளர்களோடு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஸ் பூசன் கானொலி காட்சி வாயிலாக ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். இந்த கூட்டத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் தொடர்பாகவும், மருத்துவமனையில் மருந்து மற்றும் சிகிச்சை வசதிகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் முதல் கட்டமாக மீண்டும் முக கவசம் கட்டாயம் என்பதை நடைமுறை படுத்துவது குறித்தும் ஆலோசிக்கலாம் என கூறப்படுகிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal