அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ள நிலையில், ஓ.பன்னீர் செல்வமும் நாளை தாக்கல் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

சென்னை, அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அக்கட்சியில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் புதிதாக உருவாக்கப்பட்டது. இந்த நிலையில், கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11-ந்தேதி நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில், அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தற்போது, அக்கட்சியில் பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்க வரும் 26-ந்தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்றும், நாளையும் நடக்கிறது. வேட்புமனு பரிசீலனை 20-ந்தேதி நடக்கிறது. வேட்புமனுக்களை 21-ந்தேதி மாலை 3 மணி வரை திரும்ப பெறலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்பு மனு தாக்கல் தொடங்கிய நிலையில், வேட்பு மனுவை எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்தார். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தல் நடத்தும் அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ள நத்தம் விஸ்வநாதன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோரிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து யாரும் வேட்பு மனுவை தாக்கல் செய்யாததால், அவர் போட்டியிடின்றி அ.தி.மு.க. பொதுச்செயலாளராக தேர்வாகிறார். வேட்புமனு தாக்கல் செய்வதற்கு நாளை மதியம் 3 மணி வரை அவசாசம் உள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக நாளை அறிவிப்பு வெளியிடப்பட உள்ளது.

இதற்கிடையே, பொதுச்செயலாளர் தேர்தலை தடுத்து நிறுத்த சட்ட ரீதியான போராட்டத்தை ஓ.பி.எஸ். தரப்பு கையில்ல் எடுத்திருக்கிறது. இந்த நிலையில்தான், நாளை காலை 10.30 மணிக்கு ஓ.பி.எஸ். பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

இதற்காக, பாதுகாப்பு கேட்டு இன்று மாலை டி.ஜி.பி.யிடம் ஓ.பி.எஸ். தரப்பு மனு அளிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதாவது, ஒரு பக்கம் சட்ட ரீதியிலும் மறுபக்கம் களத்திலும் ஓ.பி.எஸ். போட்டியிட தயாராகி வருவதுதான், அ.தி.மு.க.வில் மேலும் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal