தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல்.பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவின்படி விளாத்திகுளம் மற்றும் கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையம், திருச்செந்தூர் காவல் நிலையம் ஆகிய காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் “மாற்றத்தை தேடி” என்ற சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏற்படுத்தப்பட்டு உறுதிமொழி எடுக்கப்பட்டது.

விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திருமதி. பஞ்சவர்ணம் தலைமையிலான போலீசார் விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இளம்புவனம் மற்றும் அம்மாமடம் ஆகிய பகுதிகளில் பொதுமக்களிடமும், கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. பத்மாவதி தலைமையிலான போலீசார் கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கழுகுமலை பகுதியில் உள்ள ஒரு தீப்பெட்டி ஆலையில் வேலை செய்யும் பெண்களிடமும், திருச்செந்தூர் காவல் நிலைய ஆய்வாளர் திரு. முரளிதரன் தலைமையிலான போலீசார் திருச்செந்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜீவாநகர் பகுதியில் இளைஞர்கள் உட்பட பொதுமக்களிடமும் ‘மாற்றத்தை தேடி” விழிப்புணர்வு நிகழ்ச்சி மூலமாக கஞ்சா, புகையிலை போன்ற போதை பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

மேலும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், போக்சோ சட்டங்கள் குறித்தும், குழந்தை திருமண தடைச் சட்டம், குழந்தை தொழிலாளர் தடுப்புச் சட்டம், வரதட்சணை தடுப்புச் சட்டம், காவலன் எஸ்.ஓ.எஸ். செயலி குறித்தும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான இலவச உதவி எண்களான 1098, 1091, 181 ஆகிய செல்போன் எண்கள் குறித்து எடுத்துரைத்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

மேலும் இந்நிகழ்ச்சியின் முக்கிய நிகழ்வாக மேற்படி காவல்துறையினரின் முன்னிலையில் கீழ் கண்டவாறு உறுதிமொழி ஏற்கப்பட்டது. ‘நாம் நமக்காகவும் நம் சந்ததியினருக்காகவும் சாதி, மத வேற்றுமைகள் இல்லாத தூத்துக்குடி மாவட்டத்தை உருவாக்குவோம். எதிர்மறை சிந்தனைகளை களைந்து பழிக்குப் பழி என்ற எண்ணம் நீங்கி நற்சிந்தனைகளை வளர்த்து மகளிரையும் குழந்தைகளையும் மக்களையும் பாதுகாப்போம். எந்த சூழ்நிலையிலும் எக்காரணம் கொண்டும் கத்தி, அரிவாள் மற்றும் எந்த கொடிய ஆயுதங்களையும் பயன்படுத்த மாட்டோம்” என்னும் உறுதிமொழியை கூட்டத்தில் கலந்து கொண்ட இளைஞர்கள் உட்பட அனைவரும் ஏற்று குற்றங்கள் இல்லாத தூத்துக்குடி மாவட்டத்தை உருவாக்குவோம் என்ற அடிப்படையில் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal