எடப்பாடி பழனிசாமியைப் பார்த்தாலே துரோகம்… கோபம்… கொந்தளிப்பு… வரும் மக்களுக்கு என ஓ.பி.எஸ். ஆதரவாளர் மருது அழகுராஜ் சிவகங்கையில் சீறியிருக்கிறார்!

சிவகங்கையில் நடைபெறும் அதிமுக பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி மதுரை விமான நிலையம் வருகை தந்தார்.

விமானத்திலிருந்து இறங்கி விமான நிலைய ஓடுதளத்திலிருந்து விமான நிலைய வளாகத்திற்கு வெளியே வர பேருந்தில் ஏறி வருகை தந்தார். அப்போது விமான நிலைய ஓடுதள பேருந்தில் அவருடன் பயணித்த சிங்கம்புணரியைச் சேர்ந்த யோகேஸ்வரன் என்பவர் மகன் ராஜேஷ் தனது முகநூல் பக்கத்தில் எடப்பாடி பயணிப்பதாக கூறி நேரலை செய்து கொண்டிருந்தார்.

அதில் ‘‘திடீரென எதிர்க்கட்சித் தலைவர், துரோகத்தின் அடையாளம், அண்ணன் எடப்பாடி உடன் பயணம் செய்கிறேன்’’ என பேசியவர் தொடர்ந்து., எடப்பாடியார் துரோகத்தின் அடையாளம். (என்று ராஜேஷ் கூறியதும் கையை உயர்த்தி காமித்தார் எடப்பாடி பழனிசாமி.) ‘‘சின்னமாவிற்கு துரோகத்தை பண்ணியவர்., 10.5% இடஒதுக்கீட்டை தென்னாட்டு மக்களுக்கு எதிராக கொடுத்தவர்’’ என கூறியதை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியின் பாதுகாவலர் உடனடியாக அவரது செல்போனை பறித்து விமான நிலைய பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைத்தார்.

தொடர்ந்து., ராஜேஷை விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் அவரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ராஜேஷ் சிங்கப்பூரில் கட்டிட தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் சொந்த நாட்டிற்கு வந்ததும் தனது சர்ச்சை பேச்சால் தற்போது அந்த இளைஞர் சிக்கி உள்ளது பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து காவல்துறையிடம் அந்த இளைஞர் ஒப்படைக்கப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

அவர் ஏதேனும் அரசியல் பின்பலத்தைச் சார்ந்தவரா அல்லது யாரேனும் தூண்டுதலின் பேரில் எடப்பாடி அருகே நின்று கொண்டு சமூக வலைதள பக்கமான பேஸ்புக்கில் துரோகத்தின் அடையாளம் எடப்பாடி எனக் கூறி வீடியோ வெளியிட்டுள்ளது தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இதற்கிடையே, செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர் மருது அழகுராஜ், ‘‘எடப்பாடி பழனிசாமியின் முகத்தைப் பார்த்தாலே துரோகத்தை நினைத்து கோபம் வருகிறது. வருங்காலத்தில் தமிழகம் முழுவதும் அவருக்கு எதிராக மக்கள் முழக்கமிடப் போகிறார்கள். அ.தி.மு.க.வின் அடிமட்ட தொண்டர்கள் மட்டுமல்ல, பொதுமக்களும் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான மனநிலையில் உள்ளனர்.

மக்கள் மத்தியில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான மனநிலையின் வெளிப்பாடுதான் இன்றைக்கு, விமான நிலையத்தில் எதிரொலித்திருக்கிறது. அந்த இளைஞர் யார் என்றே தெரியவில்லை. அவர் மனதில் உள்ள கோபத்தை எடப்பாடியிடமே நேரடியாக வெளிப்படுத்தியிருக்கிறார் என்றால் எந்தளவிற்கு அந்த இளைஞர் ஆதங்கத்தில் இருப்பார் என்பதை தெரிந்துகொள்ளுங்கள். தமிழகம் முழுவதிலும் உள்ள இளைஞர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கொதித்தெழுவார்கள்’’ என்றார் ஆக்ரோஷத்துடன்!

தென் மாவட்ட மக்கள் இன்னும் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான மனநிலையில்தான் இருக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது இந்த சம்பவம்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal