‘தன் பெயருக்குப் பின்னால் ‘சாதி’யை அடையாளப்படுத்தி அழைக்காதீர்கள்’ என்று வாத்தி பட ஹீரோயின் பாடம் எடுத்திருப்பதுதான் அனைவரையும் வியக்க வைத்திருக்கிறது.

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் வாத்தி திரைப்படம் வருகிற பிப்ரவரி 17-ந் தேதி ரிலீசாக உள்ளது. இப்படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை சம்யுக்தா நடித்திருக்கிறார். வெங்கி அட்லூரி என்கிற தெலுங்கு இயக்குனர் இயக்கியுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் நடைபெற்றது. அதில் நடிகர் சம்யுக்தா கலந்துகொண்டு பேசிய பேச்சு தான் தற்போது வைரலாகி வருகிறது.

வாத்தி பட இசை வெளியீட்டு விழாவில் அப்படத்தின் ஹீரோயினை பேச அழைக்கும் போது சம்யுக்தா மேனன் என தொகுப்பாளர் அழைத்துள்ளார். இதையடுத்து மேடையேறி வந்த சம்யுக்தா, தயவு செய்து எனது பெயருக்கு பின்னால் சாதிப் பெயரை சேர்த்து என்னை அழைக்க வேண்டாம் என வேண்டுகோள் விடுத்தார். அதை தான் விரும்பவில்லை என கூறிய அவர், வாத்தி பட டைட்டில் கார்டில் கூட தன் பெயரை சம்யுக்தா என்று தான் குறிப்பிட்டுள்ளதாக தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், மலையாள திரையுலகில் பல பேர் சம்யுக்தா என்கிற பெயருடன் இருப்பதால் என்னை தனியாக காட்ட வேண்டும் என்பதற்காக என் பெயருடன் மேனன் என்பதை இணைத்து அழைத்து வந்தனர். தயவுசெய்து இனிமேல் அப்படி அழைக்க வேண்டாம். பள்ளியில் சேர்க்கும்போது பெரியவர்கள் அப்படி சேர்த்துவிட்டனர், அந்த சமயத்தில் நாம் ஒன்றும் செய்ய முடியாது. ஆனால் வளர்ந்த பின்னர் மாற்றிக் கொள்வது என்பது நம்முடைய விருப்பம் தான்” என அவர் கூறினார்.

இதற்கு முன்னர் நடிகைகள் ஜனனி, பார்வதி ஆகியோரும் இதுபோன்று தங்களது பெயருக்கு பின்னால் இருக்கும் சாதிய அடையாளங்களை நீக்கிவிட்டு அழைக்குமாறு வெளிப்படையாக அறிவித்தனர். அந்த லிஸ்ட்டில் தற்போது வாத்தி பட நடிகை சம்யுக்தாவும் இணைந்துள்ளார். அவரின் இந்த முடிவுக்கு நெட்டிசன்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal