‘மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நேரடி வாரிசு நான்தான்’ எனவே, அவரது சொத்தில் எனக்கு 50 சதவீதம் வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் முதியவர் ஒருவர் வழக்கு தொடுத்திருப்பதுதான் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

கர்நாடக மாநிலம் மைசூரைச் சேர்ந்த என். ஜி .வாசுதேவன் (வயது 83) என்பவர் சென்னை ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

‘‘என்னுடைய பெற்றோர் ஆர்.ஜெயராம் ஜெ. ஜெயம்மா. இவர்களுக்கு நான் ஒரே வாரிசு. என் தந்தை வேதவல்லி என்ற வேதம்மாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஜெயக்குமார், ஜெயலலிதா ஆகியோர் பிறந்தனர். இந்த வகையில் ஜெயக்குமாரும் ஜெயலலிதாவும் என்னுடைய சகோதரர் மற்றும் சகோதரி ஆவர்.

1950-ம் ஆண்டில் என் தந்தையிடம் ஜீவனாம்சம் கேட்டு மைசூர் கோட்டில் என் அம்மா வழக்கு தொடர்ந்தபோது, வேதவல்லி அவரது வாரிசுகள் ஜெயக்குமார், ஜெயலலிதா ஆகியோரை எதிர்மனுதாரர்களாக சேர்த்தார். ஆனால், இந்த வழக்கு சமரசத்தில் முடிந்துவிட்டது. ஜெயலலிதா இறப்பதற்கு முன்பு ஜெயக்குமார் இறந்து விட்டார். ஆனால் இன்றைய தினத்தில் சகோதரன் என்ற முறையில் ஜெயலலிதாவின் நேரடி வாரிசு நான் மட்டுமே உள்ளேன்.

எனவே ஜெயலலிதாவின் சொத்துக்களில் 50 சதவீதம் எனக்கு தர வேண்டும். தீபா, தீபக் தான் சட்டப்படி வாரிசு என்று அறிவித்து 2020-ம் ஆண்டு பிறப்பித்த உத்தரவை மாற்றி அமைக்க வேண்டும்’’ இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு ஐகோர்டில் உள்ள மாஸ்டர் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கிற்கு தீபா மற்றும் தீபக் ஆகியோர் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்து உத்தரவிட்டார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal