ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு வருகின்ற பிப்ரவரி 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் தங்கள் பணிகளை முழு வீச்சில் மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் அமமுக சார்பில் இந்த இடைத்தேர்தலில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் போட்டியிடலாம் என்று கூறப்பட்டது.

இந்நிலையில் தேர்தல் குறித்து ராயபேட்டையில் உள்ள அக்கட்சி அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. கட்சியின் மூத்த நிர்வாகிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், எங்கள் கட்சி சார்பாக ஈரோடு கிழக்கு நகர மாவட்டச் செயலாளர் சிவபிரசாத் குக்கர் சின்னத்தில் போட்டியிடுவார் என்று தெரிவித்தார். வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சிவபிரசாந்தின் வயது வெறும் 29 தான். இவர் ஈரோடு மாநகர் கிழக்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக செயலாளராக செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அவர் தொடர்ந்து பேசுகையில், சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றவன் நான். தற்போது எங்களுக்கென்று அமமுக என்ற கழகமும், குக்கர் சின்னமும் உள்ளது. இதனால், நாங்கள் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

அம்மா உயிருடன் இருந்த போது கட்சி எந்த நிலையில் தேர்தலை சந்திதது. ஆனால், தற்போது அக்கட்சியின் நிலை என்ன என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். இரட்டை இலை சின்னத்திற்காக இருவரும் உச்ச நீதிமன்றம் வரை சென்று சண்டையிடுகின்றனர். இதனால், சின்னம் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

திமுக அளித்த வாக்குறுதிகளை முறையாக நிறைவேற்றவில்லை. அவற்றை கூறி நாங்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுபடுவோம். எங்கள் பிரசாரத்தின் போது எங்களுடைய வியூகங்களை நீங்கள் பார்க்க முடியும். தேர்தலுக்காக 294 உறுப்பினர்களைக் கொண்ட பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal