வீர தீர செயல் புரிந்தவர்களுக்கு… சிறந்த ஆசிரியர்கள்…. சிறந்த காவலர்கள் என சிறப்பாக பணியாற்றுபவர்களுக்கு குடியரசு தினத்தன்று நற்சான்றிதழ் வழங்குவது வழக்கம். ஆனால், டாஸ்மாக்கிற்கு அதிக வருமானம் ஈட்டி கொடுத்ததற்காக நற்சான்றிதழ் வழங்கிய விவகாரம்தான் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

நாட்டின் 74வது குடியரசு தின விழா நாடு முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு துறையில் சிறந்து விளங்கும் அரசு பணியாளர்களுக்கு விருது வழங்கி அவர்களை ஊக்கப்படுத்துவது வழக்கம். அந்த வகையில் இந்த அண்டும் காவல் துறை, ஆசிரியர் என பல்வேறு துறைகளில் சான்றிதழ் வழங்கி ஊக்குவிக்கப்பட்டது.

அந்த வகையில், கரூர் மாவட்டத்தில் டாஸ்மாக் நிர்வாகத்திற்கு அதிக வருவாய் ஈட்டும் பணியை சிறப்பாக மேற்கொண்டமைக்கு பாராட்டு தெரிவித்து சான்றிதழ் வழங்கப்பட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அந்த சான்றிதழில் “இந்திய திருநாட்டின் 74வது குடியரசு தின விழா நிகழ்ச்சியின் போது தமிழ்நாடு மாநில வாணிப கழகம் மேற்பார்வையாளராக பணியாற்றுபவர் டாஸ்மாக் நிர்வாகத்திற்கு வருவாய் ஈட்டும் பணியை சிறப்பாக மேற்கொண்டமையை பாராட்டி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சான்றிதழ் வழங்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சான்றிதழ் இணையதளத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மதுவிலக்குத்துறை அமைச்சராக பொறுப்பு வகிக்கும் செந்தில் பாலாஜியின் சொந்த ஊரான கரூர் மாவட்டத்தில் இதுபோன்ற சான்றிதழ் விநியோகிக்கப்பட்டுள்ளது குறித்து நெட்டிசன்கள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர்.

இந்த நிலையில் மது விற்பனையில் வருவாய் ஈட்டியதற்காக கரூர் மாவட்ட நிர்வாகம் பாராட்டு சான்றிதழ் வழங்கியதன் அவலநிலை குறித்து சமூக வலைதளங்களில் மீம்ஸ் வடிவிலான பதிவுகள் வைரலாகி வருகிறது. சமூக வலைதள பதிவுகளால் இந்த விவகாரம் சர்சையை கிளப்பி உள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal