விஞ்ஞானம் எந்தளவிற்கு வளர்ச்சி அடைந்து வருகிறதோ… அதே அளவிற்கு ஆபத்தும் நம்மை நெருங்கிக்கொண்டிருக்கிறது. டுவிட்டர் பயனாளர்களின் அந்தரங்கங்கள் திருடப்பட்டு இருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

உலகம் முழுவதும் ஏராளமானவர்கள் டுவிட்டர் பயன்படுத்தி வருகின்றனர். அவர்கள் அதன்மூலம் தகவல்களை பரிமாறி கொள்கின்றனர். ஆனால் அவ்வப்போது சில ஹேக்கர்கள் இவர்கள் டுவிட்டர் கணக்குளை முடக்குவதை வாடிக்கையாக கொண்டு உள்ளனர்.

இந்த நிலையில் தற்போது 20 கோடி டுவிட்டர் பயனாளர்களின் விவரங்கள் திருடப்பட்டுள்ளதாக இஸ்ரேல் இணையதள கண்காணிப்பு நிறுவனமான ஹெட்சன்ராக் என்ற நிறுவனம் தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக அந்த நிறுவனத்தின் துணை நிறுவனர் அலன்கால் கூறியதாவது:- ‘‘20 கோடி டுவிட்டர் பயனாளர்களின் இ-மெயில் முகவரிகள் மற்றும் தொலைபேசி எண்களும் திருடப்பட்டு உள்ளது கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது.

2021-ம் ஆண்டிலேயே இது நடந்து இருக்கலாம் என நினைக்கிறேன். டுவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்குவதற்கு முன்பு இது நடந்து உள்ளது. ஆனால் இதன் பின்னணியில் உள்ள ஹேக்கர்களின் இருப்பிடம் குறித்தோ இந்த செயலில் ஈடுபட்டது யார்? என்பது குறித்தோம் எந்த தகவலும் இல்லை. இதனை விசாரிக்கவும், சரி செய்யவும் டுவிட்டர் நிறுவனம் என்ன நடவடிக்கை எடுத்தது என்பது குறித்து எந்த தெளிவான விளக்கங்களும் இல்லை’’ இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஹேக்கர்கள் மூலம் பலரது அந்தரங்க தகவல்களும் திருடப்பட்டு இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் டுவிட்டர் பயனாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal