அரசு பஸ்கள் தனியார் மயமாக்கப்படும் என்ற பேச்சுக்கே இடமில்லை என தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் திட்டவட்டமாக தெரிவித்தார்.

பெரம்பலூர் மாவட்டம், மேல உசேன் நகரம் கிராமத்தில் 1 கோடியே 28 லட்சம் ரூபாய் மதிப்பிலான மறுசீரமைப்பு குடிநீர் திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய பின், பத்திரிகையாளர்களை சந்தித்த, தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், ‘‘தமிழக அரசு போக்குவரத்து கழகங்களுக்கு புதிதாக 2,000 பேருந்துகள் வாங்கப்பட உள்ளது. அதற்கான டெண்டர் விரைவில் கோரப்பட்டு அதில் கலந்து கொள்ளும் நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு புதிய பேருந்துகள் வாங்கப்படும். விரைவாக, புதிய பேருந்துகளை அறிமுகப்படுத்த வேண்டும் என தமிழக முதலமைச்சர் அறிவுரை வழங்கி உள்ளதால் அதற்கான நடைமுறை தற்பொழுது, தொடங்கப்பட்டுள்ளது.

அரசு பேருந்துகள் தனியார் மயமாக்கப்படும் என்ற பேச்சுக்கே இடமில்லை. இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு மாணவர்களுக்கு இலவச பயண திட்டம், பெண்களுக்கு இலவச பயணத்திட்டம் என பல்வேறு திட்டங்களை தமிழக முதல்வர் வழங்கி வருகிறார். இந்தத் திட்டங்கள் அனைத்தும் தொடரும். போக்குவரத்து தொழிலாளர்கள் ஊதிய உயர்வு தொடர்பாக நேற்று நடைபெற்ற ஐந்தாம் கட்ட பேச்சுவார்த்தையில் பெரும்பாலான கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளனர் ஒரு சில கோரிக்கைகள் மட்டும் தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று விரைவில் தீர்வு காணப்படும். அதேபோன்று சென்னையில் தனியார் பேருந்துகள் இயக்க அனுமதி வழங்கப்படவில்லை.

சென்னையில் அரசு பேருந்துகள் மட்டுமே இயக்கப்படும். தனியார் பேருந்துகளுக்கு அனுமதி கிடையாது. அதிமுக ஆட்சிகாலத்தில் சென்னையில் இயக்கப்பட்ட பெரும்பாலான மினி பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளது. சென்னையில் எந்த வழித்தடங்களில் மினி பேருந்துகள் தேவை என்பதை கண்டறிந்து அவற்றை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களில் காலியாக உள்ள ஓட்டுநர், நடத்தினர் பணிகளை நிரப்புவதற்காக கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருகிறது. அது முடிந்த பின்பு விரைவில் அவற்றை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்’’ இவ்வாறு அவர் தெரிவித்தார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal