• சாட்டையை சுழற்றுவாரா ஸ்டாலின்

பெண் கவுன்சிலர்கள் மற்றும் பெண் சேர்மன்களில் விவகாரங்களில் அவர்களது கணவர்களின் தலையீடு அதிகமாக இருப்பதுதான் திமுகவுக்கு பெரிய தர்மசங்கடத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

சமீபத்தில் தி.மு.க. பெண் கவுன்சிலர் ஒருவர் ஏற்படுத்தி உள்ளார்.. அது தொடர்பான பரபரப்பு சென்னையை வட்டமடித்து கொண்டிருக்கிறது. வீடியோ ஒன்று வைரலாகி கொண்டிருக்கிறது. பெரம்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கொடுங்கையூர் கொய்யாத்தோப்பு சோலையம்மன் பகுதியைச் சேர்ந்தவர் தேவி. இவர் தனது இடத்தில் வீடு ஒன்றை கட்டி வருகிறார்.

இந்த பகுதியில் 34 வதுவார்டு தி.மு.க. கவுன்சிலர் ஷர்மிளா காந்தி. இவரது கணவர் பெயர் கருணாநிதி. இவர் மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினராக உள்ளார். கடந்த 29&ந்தேதி காலை, வீடு கட்டி வரும் தேவியிடம் சென்ற கருணாநிதி, முறையான கட்டுமான அங்கீகாரம் உள்ளதா? என்று கேட்டுள்ளார். அப்போது கருணாநிதியுடன் ஷர்மிளாவும் உடன் சென்றார் என்றாலும், கருணாநிதிதான் இந்த பண விவகாரம் குறித்து பேச்சு நடத்தினார்.

அதற்கு தேவி, வீடு கட்ட அங்கீகாரம் முறையாக உள்ளது என்று சொல்லி உள்ளார்.. உடனே கருணாநிதி, ‘‘அப்படின்னா அதை காட்டுங்கள், கட்டுமான பணிகளை உடனே நிறுத்துங்கள்.. நாங்க டாக்குமென்ட்டை பார்த்துவிட்டு சரி என்று சொன்னபிறகுதான் வீடு கட்ட ஆரம்பிக்க வேண்டும்’’ என்று சொல்லிவிட்டு, கட்டுமானப்பணிகளையும் நிறுத்திவிட்டு சென்றுவிட்டார். அத்துடன் கட்டுமான பணிகளை மீண்டும் தொடங்க லட்சக்கணக்கில் கருணாநிதி பணம் கேட்டதாகவும் தெரிகிறது.

இதனால், மனவேதனை அடைந்த தேவி, மறுநாள், மாமன்ற உறுப்பினர் அலுவலகம் சென்று இதுகுறித்து கேள்வி எழுப்பினார். அங்கே கருணாநிதியும், ஷர்மிளாவும், வேறு சிலரும் உட்கார்ந்திருந்தனர். அப்போது பணம் கேட்டு கவுன்சிலரின் கணவர் கருணாநிதி ஷர்மிளாவை மிரட்டப்பட்டதாகவும், அவ்வளவு பணம் தன்னால் தர முடியாது என்று தேவி சொன்னதாகவும் தெரிகிறது. இது வாக்குவாதமாக வெடித்தது.

அதை தேவி தரப்பிலேயே வீடியோவும் எடுக்கப்பட்டுள்ளது.. கருணாநிதி தேவியிடம் பேசும்போது, ‘‘நான் நேத்து என்ன கேட்டேன்? உங்க இடம்தானே கட்டுங்க.. முழுசா கட்டிக்குங்க.. நான் அவ்ளோ சொன்னேன் இல்லை?’’ என்று சீறுகிறார். அதற்கு தேவியோ, ‘‘எங்க இடம் நாங்க கட்டறோம்.. எங்கிருந்தோ வந்து கவுன்சிலர் ஆயிட்டு எங்களை மிரட்டறீங்க? நல்லது பண்றதுக்காகத்தானே வந்திருக்கீங்க? மேடம், நீங்கதானே கவுன்சிலர்.. உங்க வீட்டுக்காரர் ஏன் பேசறார்?.. வீடியோ எடுக்கறேன்.. இப்போ பேசுங்க எல்லாரும்” என்று தேவி கொந்தளிக்கிறார்.

வீடியோ எடுக்கிறேன் என்று சொன்னதுமே, அந்த கூட்டம் அப்படியே கமுக்கமாக உட்கார்ந்துவிடுகிறது. இந்த வீடியோதான் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இன்னும் மாமன்ற கூட்டம் தொடங்கப்படாத நிலையில், பெண் கவுன்சிலரின் கணவர் வீடு கட்டும் பெண்ணிடம் லட்ச கணக்கில் பணம் கேட்டு மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதைதான் கனிமொழி அன்றே சொன்றார். மேயர் பதவி ஏற்றுக் கொண்ட பெண் மேயர்கள், கவுன்சிலர்களுக்கு வாழ்த்து தெரிவித்து முக்கிய அறிவுரை ஒன்றை சொல்லியிருந்தார்.. அதில், ‘‘அடுத்த தலைமுறையில் உள்ள உங்கள் மகளுக்கும் இந்த வாய்ப்பு கிடைக்க வேண்டும். அண்ணன் இருக்கிறார். கணவர் இருக்கிறார். அப்பாவும் மகனும் இருக்கிறார். அவர்கள் பார்த்துக்கொள்வார் என்று விடக்கூடாது. இது உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள வாய்ப்பு. உங்களால் நிச்சயம் முடியும் நீங்கள் ஆளுமை பண்புடன் சிறந்த முறையில் நிர்வாகத்தை நடத்தி செல்ல வேண்டும்’’ என்றார்.

அதுமட்டுமல்ல, பெண் கவுன்சிலர்களின் குடும்ப உறுப்பினர்கள் நிழல் கவுன்சிலர்களாக வலம் வருவதை தடுத்து மக்களிடம் நன்மதிப்பை பெறுவது எப்படி என்பது குறித்தும் ஆலோசனைகள் வழங்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் அப்போதே வெளியாகின.. ஆனால், அதற்குள் இப்படி பிரச்சனை கிளம்பி உள்ளதுடன், திமுகவுக்கு அடுத்த தர்மசங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது..!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal