ம.தி.மு.க., பொது செயலாளர் வைகோ மகன் துரை வைகோவுக்கு தலைமைக்கழக செயலாளர் பதவி வழங்க கட்சி பொதுக்குழு ஒப்புதல் வழங்கியது. கட்சிக்கு எதிராக கருத்து கூறுவோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் வைகோவுக்கு அதிகாரம் வழங்கப்பட்டது.

ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ தலைமையில், அக்கட்சியின் பொதுக்குழு கூட்டம், இன்று சென்னை அண்ணாநகரில் கூடியது. துணை பொதுச் செயலர்களாக ஆடுதுறை முருகன், ராஜேந்திரன், தலைமை நிலைய செயலராக துரை வைகோ, தணிக்கை குழு உறுப்பினராக சுப்பையா ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

சிவகங்கை மாவட்டச் செயலர் செவந்தியப்பன், திருவள்ளூர் மாவட்ட செயலர் செங்குட்டுவன், விருதுநகர் மாவட்ட செயலர் சண்முகசுந்தரம் மற்றும் உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் என, 20க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் போர்க்கொடி துாக்கி உள்ளனர். ‘சட்டத்திற்கு உட்பட்டு உட்கட்சி தேர்தலை நடத்த வேண்டும். ம.தி.மு.க.,வில் எந்த உழைப்பும் தராத, தியாகம் செய்யாத துரையை கட்சியில் சேர்த்து, உயர்பதவி கொடுப்பதை நாங்கள் ஏற்கவில்லை’ என்ற கோஷத்தை மூத்த நிர்வாகிகள் எழுப்பி உள்ளனர்.

இது தொடர்பாக, பொதுக்குழு கூட்டத்தில், கட்சிக்கு எதிராக பேசுவோர் மீது நடவடிக்கை எடுக்க வைகோவுக்கு அதிகாரம் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal