எம்.ஜி.ஆர். ஸ்டைலில் ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும் என விஜய் பாடுபட்டுக்கொண்டிருக்கையில், ஆதவ் அர்ஜுனாவும், புஸ்ஸி ஆனந்தும் விஜய்யின் முதல்வர் கனவிற்கு வேட்டு வைத்துவிடுவார்கள் போல!
ஆம், ‘நடிகர் விஜய்யைப் பற்றி யாரும் விமர்சித்துப் பேசவேண்டாம்’ என எடப்பாடி பழனிசாமி ரகசிய கட்டளையிட்டிருந்த நிலையில், ‘அண்ணாமலையை நம்பியாவது பத்து பேரு போவானுங்க… எடப்பாடி பழனிசாமியை நம்பி யாருபோவாங்க…’ என ஆதவ் அர்ஜுனா சமீபத்தில் ஒருமையில் பேசிய வீடியோ வெளியானது.
இந்த வீடியோ குறித்து சீமானிடம் கேட்டபோது, ‘இதே ஆதவ் அர்ஜுனா ‘அ.தி.மு.க. கூட்டணிக்கு வாருங்கள் உங்களுக்கு துணை முதல்வர் பதவி வாங்கிக் கொடுக்கிறேன் என என்னிடம் பேசினார்’ என பத்திரிகையாளர்கள் மத்தியில் ஓபனாகப் பேசினார்.
இந்த நிலையில்தான், அதிமுக மற்றும் பாஜக தலைவர்கள் குறித்து தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரச்சார மேலாண்மை செயலாளர் ஆதவ் அர்ஜுனா பேசிய வீடியோ பதிவு ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில், அந்த வீடியோவுக்கு அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் ட்வீட் செய்துள்ளார். அதில் ஆதவ் அர்ஜுனா கூறியுள்ளதாவது: “எனது தனிப்பட்ட உரையாடல் குறித்த காணொளி ஒன்று பொதுவெளியில் வெளியானது. ஜனநாயகத்தின் மீது எப்போதும் நம்பிக்கை கொண்டவன் நான். அதைத் தாண்டி, எந்தவித தனிநபர் தாக்குதலையும், முரண்பாடுகளையும் எப்போதும் எனது பொதுவாழ்வில் நான் கடைப்பிடித்தது கிடையாது. என்னுடன் பயணிப்பவர்களுக்கு அது நன்கு தெரியும்.
என்னுடைய அரசியல் பயணத்தில் எத்தனையோ விமர்சனங்கள், தனிப்பட்ட தாக்குதல்கள் எல்லாம் என் மீது முன்வைக்கப்படும் பொழுது, எந்த இடத்திலும், யார் மீதும் தரம் தாழ்ந்த விமர்சனங்களை நான் வைத்தது கிடையாது.
உண்மையும், நேர்மையும் கொண்ட ஒரு புதிய மக்கள் அரசியலைக் கட்டியெழுப்ப வேண்டும் என்ற ஆவலுடனே நான் இந்த அரசியல் களத்திற்கு வந்தேன். தனிமனித விமர்சனங்கள் ஜனநாயக அரசியலுக்கு அழகல்ல எனும் கொள்கையை உறுதியாகக் கொண்டுள்ளேன். அப்படியிருக்கையில், அந்த காணொளியில் வெளியான வார்த்தைகள் எனது இயல்பை மீறியது என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். அதற்காக, உண்மையாகவும், நேர்மையாகவும் எனது வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
ஜனநாயகபூர்வ பொது வாழ்வில் எதிர்கொள்ளும் ஒவ்வொரு நிகழ்வையும் எனது அரசியல் வாழ்வில் ஒரு கற்றலாகவே நான் எடுத்துக்கொள்கிறேன். அந்தவகையில், கொள்கைக்கான அரசியலையும், வெளிப்படைத்தன்மையான ஜனநாயகத்தையும் என்றும் மதித்து பயணிப்பதே எனது இலக்கு” என கூறியுள்ளார்.
அரசியல் களத்தில் படிப்படியாக உயர்ந்து முதல்வர், எதிர்க்க்ட்சித் தலைவர் என்ற வரிசையில் அமர்ந்திருக்கு எடப்பாடி பழனிசாமியை ஆதவ் அர்ஜுனா விமர்சித்ததை எம்.ஜி.ஆர். நலன் விரும்பிகளே விரும்பவில்லை.
ஏற்கனவே, வி.சி.க.வுக்கும் உண்மையாக இல்லாத ஆதவ் அர்ஜுனாவின் அரசியல் முதிர்ச்சியின்மை, த.வெ.க.வை படுபாதாளத்திற்குள் தள்ளிவிடும். அதே சமயம், ஏற்கனவே, பல குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியிருக்கிறார் புஸ்ஸி ஆனந்த். இவர்கள் இருவரின் செயல்பாட்டால் விஜய்யின் எம்.ஜி.ஆர். கனவு கானல் நீராகிவிடும் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்!