எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபோது எந்த நடிகைக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, தனது உடன்பிறவா தோழிக்குக் கூட இப்படி முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. ஆனால், முதல்வர் விஜய் திரிஷாவுக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கெடுக்கிறார் என தமிழக மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், தமிழ்நாட்டின் முதலமைச்சருமான விஜய் முதல்முறையாகச் சென்னை கோட்டையில் தேசியக் கொடி ஏற்றியதும், அவர் வெளியிட்ட அறிவிப்புகளும்தான் மக்களிடையே பேசுபொருளாக இருந்திருக்க வேண்டும். மாறாக, இதே விழாவில் திரிஷா தனது தாயாருடன் பங்கேற்றதுதான் பேசுபொருளாகியுள்ளது. முதல்வர் விஜய்யின் தந்தை சந்திரசேகர், தாய் சோபா ஆகியோருக்கு அருகில் நடிகை திரிஷா மற்றும் அவரது தாயார் அமர்ந்திருந்த வீடியோவைத்தான் ஊடகங்கள் காலையிலிருந்து மாறி மாறி ஒளிபரப்புச் செய்கின்றன. மக்களும் இதைப் பற்றித்தான் பேசுகிறார்கள்.

நாட்டின் 80-வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது. இன்று காலை தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், தமிழ்நாட்டின் முதலமைச்சருமான விஜய் முதல்முறையாகச் சென்னை கோட்டையில் கொடியேற்றினார். கடந்த ஆண்டு வரை தமிழ்நாட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்த விஜய், இந்த ஆண்டு தமிழ்நாட்டின் முதல்வராகியுள்ளார். எந்தவொரு பெற்றோருக்கும் பெருமையான விஷயம் என்றால், தனது மகனை மாநிலத்தின் முதல்வராகப் பார்ப்பதாக இருக்கும். அதே பெற்றோருக்கு வாழ்நாள் சந்தோஷம் என்றால், அதே மகன் கோட்டையில் மாநிலத்தின் முதல்வராகக் கொடியேற்றுவதைக் காண்பதாகும். அது எந்தப் பெற்றோருக்கும் கிடைக்காத பாக்கியம். அதேபோல்தான் முதல்வர் விஜய்க்கும் தனது பெற்றோரின் முன்னிலையில் இந்திய தேசியக் கொடியை மாநிலத்தின் சார்பாக ஏற்றும் நிகழ்வும்.

இந்த பாக்கியங்கள்தான் இன்று தமிழ்நாட்டில் பேசுபொருளாக இருந்திருக்க வேண்டும். ஏனெனில், கட்சி ஆரம்பித்த இரண்டே ஆண்டுகளில், அதுவும் முதல் தேர்தலிலேயே இவ்வளவு பெரிய வெற்றிபெறுவது என்பது அசாதாரணமான ஒன்று. தமிழ்நாட்டின் 1.72 கோடி மக்களின் நம்பிக்கையைப் பெற்று ஆட்சியமைத்ததும் சாதாரண விஷயம் கிடையாது. திமுக, அதிமுக என்ற அசுரபலம் உள்ள கட்சிகளை மீறி விஜய் என்ற தனிநபரின் செல்வாக்கால் கிடைத்த இந்த வெற்றியும் சாதாரணமானது கிடையாது. வேட்பாளர் யார் என்றே தெரியாமல் மக்கள் விஜய் என்ற நபரை நம்பி வாக்களித்ததும் தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் சாதாரணமானது கிடையாது.

இப்படி அபூர்வ வரலாற்றுடன் முதல்வராகித் தேசியக் கொடி ஏற்றியுள்ளார் முதல்வர் விஜய். இதுதான் தமிழ்நாட்டின் பேசுபொருளாக இருந்திருக்க வேண்டும். ஆனால் மாறாக, நடிகை திரிஷா தனது தாயாருடன் சுதந்திர தின விழாவில் பங்கேற்றதும், அவருக்கு முதல் வரிசையில் இடம் கொடுத்ததும் பேசுபொருளாகியிருப்பது என்பது உண்மையில் விவாதிக்கப்பட வேண்டிய விஷயம் ஆகும். ஊடகங்கள் ஏன் திரிஷா பங்கேற்றதற்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தன?

அதேபோல் திரும்பத் திரும்ப ஊடகங்களில் திரிஷா பங்கேற்றதுதான் காட்டப்படுவதும் தவறானதாகவே பார்க்கப்படுகிறது. இது ஒருபுறம் எனில், விஜய் ரசிகர்களும், ரசிகைகளும், தவெக நிர்வாகிகளும் இந்த விழாவில் திரிஷா பங்கேற்றதையும், அவருக்கு ஊடகங்கள் அளிக்கும் முக்கியத்துவத்தையும் கண்டு கோபமடைந்து பதிவிட்டு வருகிறார்கள். தேவையற்ற சர்ச்சை உருவாகி வருவதாகவே அவர்கள் கருத்துகளைப் பதிவிட்டு வருகிறார்கள்.

மாநிலத்தின் முதல்வர் விஜய் அல்லது நடிகை திரிஷா இவர்களில் யாராவது ஒருவர் இந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்தால்தான் இந்தப் புகை அணையும்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal