வருகிற 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி 25 இடங்களில் போட்டியிட விருப்பம் தெரிவித்திருக்கிறது. இதுதான் தி.மு.க. தலைமைக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருக்கிறது.
வி.சி.க.வில் இருந்து ஆதவ் அர்ஜுனா நீக்கப்பட்ட பிறகு மீண்டும் ‘லைம் லைட்’டிற்கு வந்திருக்கிறார் வன்னி அரசு. அவர் ஒரு நாளிதழுக்கு அளித்த பேட்டியில்,
‘‘1999-ல் விசிக தேர்தல் பாதைக்கு வந்தபோதே ‘எளிய மக்களுக்கும் அதிகாரம், கடைசி மனிதனுக்கும் ஜனநாயகம்’ எனச் சொன்னார் திருமாவளவன். இதுதான் 2016-ல் ‘ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு’ என்ற எங்கள் கோட்பாடாக மாறியது. இதைத்தான் ஆதவ் அர்ஜுனாவும் பேசினார். இதைத்தான், “ஆதவ்வின் இந்த கருத்து தவறான கருத்து இல்லை. கட்சியின் நிலைப்பாடு தான்” என்று தலைவரும் சொன்னார். அந்த நிலைப்பாட்டில் விடுதலை சிறுத்தைகள் எப்போதும் உறுதியாக இருக்கிறோம்.
அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் ‘இதையெல்லாம் பேசவேண்டாம்’ என தலைவர் சொன்னதை மீறி புத்தக வெளியீட்டில் அவர் பேசினார். அப்படி கட்டுப்பாட்டை மீறியதால் தான் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார் ஆதவ் அர்ஜுனா. பொதுவாக கட்சியிலிருந்து இப்படி இடைநீக்கம் செய்யப்படுபவர்கள் அதுகுறித்து விளக்கமளிப்பார்கள். அதை உயர்மட்டக்குழு பரிசீலித்து மீண்டும் இணைத்துக் கொள்ளப்படுவார்கள். ஆனால், அதற்கான வாய்ப்பை ஆதவ் அர்ஜுனா உருவாக்கவில்லை. விலகுவதாக அறிவித்து விட்டார். அவர் விலகியது வருத்த மளிக்கக்கூடியதுதான்’’ என்று கூறியிருக்கிறார்.
2026 சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி குறித்த கேள்விக்கு, ‘‘விசிக-வின் இந்தப் பயணம் சாதாரணமானது அல்ல. குருதியாற்றை கடந்து பயணித்து இந்த இடத்தை அடைந்திருக்கிறோம். இப்போது நாங்கள் வலிமைமிக்க அங்கீகரிக்கப்பட்ட கட்சியாகியிருக்கிறோம். இப்போது தமிழகத்தின் திசைவழியை தீர்மானிக்கும் சக்தியாக உள்ளோம். 10 ஆண்டுகளுக்கு முன்பு விசிக-வை கூட்டணியில் சேர்த்தால், தலித் அல்லாதவர்கள் வாக்களிக்க மாட்டார்கள் என்ற எண்ணவோட்டம் இருந்தது.
அதனை மாற்றி இப்போது விசிக இருக்கும் கூட்டணியே வெற்றிபெறும் என்ற சூழலை உருவாக்கியுள்ளோம். 2026-ல் திமுக கூட்டணியிலேயே தொடர்வோம் என திருமாவளவன் கூறியுள்ளார். என்னைப்போன்ற கடைநிலை தொண்டர்களின் மனநிலை என்னவென்றால், 2026-ல் 25 தொகுதிகளை கேட்டுப் பெறவேண்டும், இது நமது கட்சிக்கான சரியான நேரம் என எண்ணுகிறோம்.
விசிக-வில் உள்ள அனைவரின் விருப்பமுமே எங்கள் தலைவரை முதல்வராக்க வேண்டும் என்பதுதான். எதார்த்த சுழலில் ஒரு தலித் முதல்வராக முடியாது என எங்கள் தலைவர் சொல்கிறார். ஆனால், இன்று அவரை தலித் தலைவராக பார்க்காமல், பொதுத்தலைவராக மக்கள் பார்க்கத் தொடங்கிவிட்டனர். எனவே, அவருக்கான உயரத்தை அடையவைக்க நாங்கள் இன்னும் அதிகம் உழைக்க வேண்டியுள்ளது, அதற்காக உழைக்க ஆரம்பித்துவிட்டோம்’’ என்று கூறியிருக்கிறார்.
தி.மு.க.வின் மீது ஏற்கனவே ஆதவ் அர்ஜுனா இறக்கிய குண்டைத் தான் வன்ன¤ அரசும் வீசியிருக்கிறார். ஆதவ் அர்ஜுனாவால்தான் இன்றைக்கு தமிழகத்தில் வி.சி.க. என்ற கட்சி தினந்தோறும் விவாதங்களில் பேசப்படுகிறது என்பதையும் வி.சி.க.வினர் விரைவில் உணர்வார்கள்.