அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில், மாவட்ட செயலர்கள் குறித்து பேச அனுமதிக்காதது, நிர்வாகிகளிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
மக்களவைத் தேர்தல் தோல்வி குறித்து, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, தொகுதி வாரியாக கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
ஆரணி, தென்காசி நிர்வாகிகள் கூட்டத்தில் நடந்தது குறித்து கூட்டத்தில் கலந்து கொண்ட சிலரிடம் பேசினோம்.
‘‘சார், ஆரணி கூட்டத்தில், போளூர் ராஜன் என்பவர், மாவட்ட செயலர் ஜெயசுதா மீது, சில குற்றச்சாட்டுகளை வைத்தார். அப்போது பழனிசாமி குறுக்கிட்டு, ‘‘தனிப்பட்ட நபர்கள் குறித்து பேச வேண்டாம்’’ என கண்டித்ததும், ‘‘பேசுவதற்கு தானே கூட்டம்’’ என அவர் எதிர்த்து பேச, பழனிசாமி அதிர்ச்சி அடைந்தார்.
அப்போது துணை பொதுச்செயலர் முனுசாமி குறுக்கிட்டு, ‘‘ஜெயலலிதா இருந்தால் இப்படி பேசுவீர்களா? பொதுச்செயலர் அமரச் சொன்னால், உடனே அமர வேண்டும்’’ என அறிவுரை கூறி, அமர வைத்தார்.
தென்காசி கூட்டத்தில், தேர்தல் தோல்விக்கு என்ன காரணம் என நிர்வாகிகளிடம் பழனிசாமி கேட்டார். அதற்கு நிர்வாகிகள், ‘‘ஒரே சமூகத்தைச் சேர்ந்த கிருஷ்ணசாமி, ஜான் பாண்டியன் ஆகியோர் போட்டியிட்டதால், ஓட்டுகள் பிரிந்து விட்டன. நம் கட்சி வேட்பாளரை களம் இறக்கி இருந்தால், கட்சி வெற்றியடைந்திருக்கும்’’ என்றனர்.
அதை கேட்ட பழனிசாமி, ‘‘நம் கட்சி சின்னத்தில் தான் கிருஷ்ணசாமி போட்டியிட்டார். நீங்கள் கடுமையாக உழைத்திருந்தால், அவர் வெற்றி பெற்றிருப்பார். வேட்பாளர் குறித்து கவலைப்படாமல், சட்டசபை தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற உழைக்க வேண்டும். சட்டசபை தேர்தலில், நீங்கள் எதிர்பார்க்கும் வலுவான கூட்டணி அமையும்’’ என்றிருக்கிறார். இப்படி காரசாரமாக கூட்டம் நடந்து முடிந்தது என்றனர்.
இன்னும் சில மூத்த நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம். ‘‘சார், கே.பி.முனுசாமி ஜெயலலிதா இருந்திருந்தால் இப்படி பேசுவீர்களா? என கேட்கிறார். எடப்பாடி பழனிசாமி ஜெயலலிதாவா?’’ என நம்மிடமே கேள்வியை எழுப்பினார்.
நல்லா கேள்வி கேக்குறீங்கப்பா… நிர்வாகிகளிடம் குறைகளை கேட்டபதற்கு பதில், இரட்டை இலையை வெயிலிலும், மழையிலும் சுமந்து செல்லும் அடிமட்டத் தொண்டர்களிடம் கருத்துக் கேட்டால் நன்றாக இருக்கும்!