கேரளா மற்றும் தமிழகத்தை தென்மேற்கு பருவமழை நெருங்கும் நிலையில், வங்கக்கடலில் புயல் சின்னம் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஆழ்கடல் மீனவர்கள், நாளை மறுதினத்துக்குள் கரை திரும்பும்படி கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளனர்.

தென்மேற்கு பருவமழை நேற்று முன்தினம் (மே 19) துவங்கி, தமிழக – கேரள கடற்பகுதியை நெருங்கி வருகிறது. இந்நிலையில், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நாளை காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக உள்ளது.

இது, வடகிழக்கு திசையில் நகர்ந்து, மத்திய வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற உள்ளது. இந்த மண்டலம், புயல் சின்னமாக வலுப்பெற்று, ஆந்திரா, ஒடிசா கடலோரப் பகுதியை நெருங்கும் என, வானிலை ஆய்வாளர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

இந்நிலையில், வானிலை நிலவரம் குறித்து, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரை கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘‘தேனி, விருதுநகர் மற்றும் தென்காசி மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் இன்று மிக கனமழை பெய்யும்.

கன்னியாகுமரி, திருநெல்வேலி, மதுரை, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில், ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும்.

தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில், நாளை முதல் இரண்டு நாட்களுக்கு ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில், நாளை மறுதினம் கனமழை பெய்யும்.

நீலகிரி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில், 24ம் தேதி ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்; அதிகபட்சம், 35 டிகிரி செல்ஷியஸ் வரை வெப்பநிலை பதிவாகும். குமரிக்கடல், மன்னார் வளைகுடா, கேரளா, தென்மேற்கு மற்றும் அதையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளிலும், தமிழக, கர்நாடக, லட்சத்தீவு, மாலத்தீவு கடற்பகுதிகள், மத்திய வங்கக்கடல் பகுதிகள் போன்றவற்றில், மணிக்கு 55 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசும்.

எனவே, 24ம் தேதி வரை இந்த பகுதிக்குள் மீனவர்கள் செல்ல வேண்டாம். ஆழ்கடலில் உள்ள மீனவர்கள், நாளை மறுதினத்துக்குள் கரைக்கு திரும்ப வேண்டும்’’ இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal