நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் நாடு முழுவதும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. முதல் கட்ட தேர்தல் தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளுக்கு நடைபெற்று முடிந்துள்ளது. இன்னும் 6 கட்ட தேர்தலானது நடைபெற உள்ளது.  கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் வருகின்ற 26 ஆம் தேதி இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான பிரச்சாரம் தீவிரமடைந்து வருகிறது.  இந்த தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் ஆகியோ கேரளா மற்றும் கர்நாடகத்தில் களம் இறங்கியுள்ளனர்.

அந்த வகையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடந்த இரண்டு நாட்களாக கேரளாவில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது இந்தியா கூட்டணி கட்சியினரையும் கடுமையாக விமர்சனம் செய்து பிரச்சாரம் மேற்கொண்டு இருந்தார். தனது கேரளா பிரச்சாரத்தை முடித்துக் கொண்ட அண்ணாமலை நேற்று முதல் கர்நாடகாவில் தீவிரமாக களம் இறங்கியுள்ளார்.  பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பல இடங்களில் வாக்கு சேகரிப்பிலும் ஈடுபட்ட அண்ணாமலை, குறிப்பாக தமிழர்கள் வாழும் பகுதியில் வாக்குகளை வேட்டையாடினார்.

இந்த நிலையில் கர்நாடகாவில் போட்டியிடும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் நண்பரும் தற்போதைய எம்பியுமான தேஜஸ்வி சூர்யாவை ஆதரித்து அண்ணாமலை பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பிரதமர் மோடி மக்களுக்காக செயல்படுத்தியுள்ள திட்டங்களை வரிசையாக பட்டியலிட்டார். மேலும் கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியை விமர்சித்து பிரச்சாரம் மேற்கொள்ளவும் செய்தார்.  மக்களுக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் தருவதற்கு  பாஜக தயாராக இருப்பதாகவும், நீங்கள் ஒரே ஒரு போன் கால் போட்டால் ஓடி வருவதற்கு தயாராக இருப்பதாகவும் தெரிவித்து தனது நண்பருக்காக மூச்சை கொடுத்து அண்ணாமலை பேசிக் கொண்டிருந்தார்.

ஆனால் இதனை எதையும் கண்டு கொள்ளாமல் அருகில் நின்றிருந்த பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா தனது ஃபோனில் ஏதோ ஆர்வமாக தொடர்ந்து பார்த்துக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் அண்ணாமலை தனது பேச்சை நிறைவு செய்யும் சமயத்தில் போனை கீழே வை என கை மூலம் செய்து காட்டினார்.  இருந்த போதும் தேஜஸ்வி சூர்யா அண்ணாமலையின் பேச்சை கருத்தில் கொள்ளாமல் தனது போனை தொடர்ந்து பார்த்துக் கொண்டிருந்தார்.  இந்த காட்சி சமூக வலைதளங்களில் பரவி தேஜஸ்வி சூர்யாவை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal