மதுரை மேலூர் அருகே வெள்ளலூர் கிராமத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசன் பிரச்சாரம் செய்தபோது குறுக்கிட்ட விவசாயிகள், ‘5 ஆண்டுகளாக எங்கள் பகுதிக்கு என்ன செய்தீர்கள்?’ என கேள்வி எழுப்பினர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மதுரை எம்.பிசு.வெங்கடேசன் திமுக கூட்டணியில் மீண்டும் வேட்பாளராகக் களமிறங்கியுள்ளார். அண்மையில் மேலூர் அருகே வெள்ளலூர் பகுதியில் சு.வெங்கடேசன் தேர்தல் பிரச்சாரம் செய்தார். அவருடன் அமைச்சர் பி.மூர்த்தி உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் சென்றனர்.

அப்போது, சு.வெங்கடேசனிடம் அங்கிருந்த விவசாயிகள் சிலர், ‘‘5 ஆண்டுகளாக எங்கள் பகுதிக்கு என்ன செய்தீர்கள்?’’ என கேள்வி எழுப்பினர். மேலும், ‘‘முல்லை பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் பெற்றுத்தர நடவடிக்கை எடுத்தீர்களா? எங்கள் ஊரின் சாலை, நடந்துவர முடியாத அளவுக்கு மோசமாக உள்ளது. இதற்குப் பதில் சொல்லுங்கள்’’ எனக் கேட்டனர்.

விவசாயிகளின் இந்த திடீர்கேள்விகளுக்குப் பதில் சொல்லமுடியாமல் சு.வெங்கடேசன் தவித்தார். குறிப்பாக தமிழகத்தில் ஆளும் தி.மு.க. வேட்பாளர்களையும், கூட்டணிக் கட்சி வேட்பாளர்களையும் அடுக்குமாடிக் குடியிருப்பு வாசிகள், விவசாயிகள், கூலித் தொழிலாளர்கள் என பலதரப்பட்ட ஏழை மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் பெரம்பலூர் மாவட்டம் எறையூரில் நரிக்குறவ சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் மண்ணை வாரி சாபமிட்டனர்!

மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சு.வெங்கடேசனை விவசாயிகள் முற்றுகையிட்ட சம்பவம்தான் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal