நீலகிரி பாராளுமன்ற தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து திரைப்பட நடிகை நமீதா இன்று காலை திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டி பகுதி  அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் பயனாளிகளை சந்தித்து வாக்கு சேகரித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- ‘தமிழகத்தில் இதுவரை ஆண்ட கட்சிகள் யாராவது மக்களுக்கு வீடு கொடுத்துள்ளார்களா? மத்திய அரசு ஒவ்வொரு தனி நபருக்கும் இந்தியா முழுவதும் வீடு கொடுத்துள்ளது.

வீடு மட்டுமல்லாமல் குடிநீர் வசதி, மின்சார வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்து கொடுத்துள்ளது. தி.மு.க., 243 தொகுதிகளில் மக்களை சந்தித்து அவர்களின் தேவைகளை கேட்டுள்ளதா? ஆனால் பா.ஜ.க., மாநில தலைவர் அண்ணாமலை அனைத்து தொகுதிகளிலும் மக்களை நேரடியாக சந்தித்து அவர்களின் அடிப்படை தேவைகளை கேட்டுள்ளார். காட்டில் யானையை எதிர்க்க சிறு சிறு மிருகங்கள் எவ்வாறு ஒன்று சேருமோ அது போல இந்தியா  கூட்டணியில் கட்சிகள் சேர்ந்துள்ளது. இருப்பினும் அவர்களால் மோடி என்னும் பெரும் மனிதரை தோற்கடிக்க முடியாது. 

விஜய் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன். அவர் ஒரு புத்திசாலி. திறமையான போட்டியாளர் உருவாவதாக நினைக்கிறோம். கச்சத்தீவு  விவகாரத்தில் பிரதமர் மோடி மீண்டும் வெற்றி பெற்று நல்ல ஒரு நடவடிக்கையை மேற்கொள்வார்’, இவ்வாறு அவர் கூறினார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal