கடலூரில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, கேப்டன் விஜயகாந்தை நினைத்து கண் கலங்கினார். “நான் யாருக்கு என்ன துரோகம் செய்தேன்.. ஏன் கேப்டனை கடவுள் எடுத்துக்கொண்டார் ” என்று பிரேமலதா உடைந்து அழுத போது அங்கிருந்த மக்கள் அவருக்கு ஆறுதலாக குரல் எழுப்பினர்.

கடலூர் நாடாளுமன்றத் தொகுதி தேமுதிக வேட்பாளர் சிவக்கொழுந்தை ஆதரித்து பிரேமலதா விஜயகாந்த் பண்ருட்டியில் இன்று பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசும் போது, திடீரென அவருக்கு தனது கணவர் விஜயகாந்த் நினைவு வந்தததால் அவர் அழுதார். பிரேமலதா பேசியதாவது: பண்ருட்டிக்கு நான் வருவது இது என்ன முதல் தடவையா? யோசிச்சு பாருங்க. இதோ இங்கே நிற்கிறாரே சிவக்கொழுந்து.. இவர் சட்டமன்ற உறுப்பினராக ஜெயித்த காலத்தில் இருந்து நான் பண்ருட்டிக்கு வந்து கொண்டிருக்கிறேன்.

அது மட்டுமா.. நானும் கேப்டனும் கல்யாணம் முடிந்து முதன்முதலில் வந்த ஊர் இந்த பண்ருட்டி தான். ஆனால் என் துரதிருஷ்டம். கேப்டன் இல்லாமல் நான் மட்டும் பண்ருட்டிக்கு வந்திருக்கிறேன் (உடைந்து அழுகிறார்). கேப்டன் கூடவே எப்போதும் வந்த நான், இன்னைக்கு கேப்டன் இல்லாமல் உங்க கூட வந்திருக்கிறேனே.. ஏன் கடவுள் இப்படி செஞ்சிட்டாருனு தெரியலையே. நான் யாருக்கு என்ன கெடுதல் செய்தேன். கடவுள் ஏன் நம்மிடம் இருந்து கேப்டனை எடுத்துகிட்டாருனு தெரியலையே. இன்னைக்கு கேப்டன் இல்லாமல் உங்களை பார்க்க வந்ததை நினைச்சாலே என் மனசு வலிக்குதே. இதுவரை தான் சம்பாதித்த பணத்தை எல்லாம் கேப்டன், ஏழை மக்களுக்குதான் கொடுத்தாரு. அதனால் அவர் சம்பாதித்த பணம் எதுவும் பெருசா இல்லை.

ஆனால், அவர் சம்பாதித்த மக்கள், நீங்கள் என் கூட இருக்கீங்க. நான் எவ்வளவு தான் துக்கத்தை மனசுக்குள்ள கட்டுப்படுத்தினாலும் என்னால அடக்க முடியல. கேப்டன் கூட இங்கே வந்த நாட்கள் தான் என் மனசுல இருக்கு. ஆனால் கேட்பன் இல்லாம உங்களை பார்க்கும் போது என் மனசு கஷ்டமா இருக்கு. தலைவர் நம்ம கூட இல்லையே என்று யாரும் நினைக்காதீங்க. தலைவர் தெய்வமாக நம் கூட தான் இருக்காரு. இவ்வாறு பிரேமலதா பேசினார். முன்னதாக, பிரேமலதா அழுவதை பார்த்த அங்கிருந்த பெண்கள், “அம்மா அழாதீங்கமா.. நாங்க இருக்குறோமா உன் கூட” என்று கத்தினர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal