மக்களவை தேர்தல் 2024-க்கான அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை இன்று (புதன்கிழமை) அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். இதில் 16 வேட்பாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.

பின்னர் செய்தியாளர்கள் கேள்விகளுக்குப் பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, “மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி அபார வெற்றி பெறும். அதிமுகவுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு கூடியுள்ளது. அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு ஐந்து இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புதிய தமிழகம் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தல் அறிக்கையை விரைவில் எதிர்பார்க்கலாம்” என்றார்.

அதிமுக வேட்பாளர் பட்டியல்:

சென்னை வடக்கு – ராயபுரம் மனோ
சென்னை தெற்கு – ஜெயவர்தன்
காஞ்சிபுரம் (தனி) – ராஜசேகர்
அரக்கோணம் – ஏ.எல்.விஜயன்
கிருஷ்ணகிரி – வி.ஜெயப்பிரகாஷ்
ஆரணி – ஜி.வி.கஜேந்திரன்
சேலம் – விக்னேஷ்
தேனி – நாராயணசாமி
விழுப்புரம் (தனி)- ஜெ.பாக்யராஜ்
நாமக்கல் – எஸ்.தனிமொழி
ஈரோடு: ஆற்றல் அசோக்குமார்’
கரூர்: கே.ஆர்.எல்.தங்கவேல்
சிதம்பரம் (தனி): சந்திரகாசன்
நாகப்பட்டினம் (தனி)- சுர்சுத் சங்கர்
மதுரை: பி.சரவணன்
ராமநாதபுரம்: பா.ஜெயபெருமாள்

முன்னதாக, பாஜக பக்கம் பாமக சென்றுவிட்ட நிலையில், தேமுதிகவும் காலம் தாழ்த்துவதால், கூட்டணி தொகுதி பங்கீட்டை முடிக்க முடியாமல் அதிமுக திணறி வந்தது. இந்நிலையில், நேற்று மூத்த நிர்வாகிகளுடன் பழனிசாமி தீவிர ஆலோசனை நடத்தியதுடன், இன்று வேட்பாளரை அறிவிக்கவும் திட்டமிட்டார்.

அதிமுகவை எஸ்டிபிஐ, புதிய தமிழகம், புரட்சி பாரதம், அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் தலைவர் கதிரவன் பிரிவினர் மட்டுமே தற்போது ஆதரித்து வருகின்றனர். இவர்களும் தங்களுக்கு தொகுதியை ஒதுக்க கேட்டு வருகின்றனர். இதற்கிடையில், பாமகவுடன், அதிமுக மூத்த நிர்வாகிகள் அவ்வப்போது பேசி வந்தனர். ஆனால், மக்களவை, மாநிலங்களவை தொகுதிகளில் உடன்பாடு எட்டப்படாமல் இருந்தது.

இந்நிலையில், நேற்று பாமக பாஜகவுடன் இணைந்து 10 தொகுதிகளை பெற்று கூட்டணியை உறுதி செய்துவிட்டது. தற்போது, தேமுதிகவுடன் தொடர்ந்து அதிமுக பேசி வருகிறது. தேமுதிகவும் நாளை மார்ச் 21-ம் தேதி முடிவு அறிவிப்பதாக கூறியுள்ளது. எனவே, காத்திருக்க வேண்டிய சூழலுககு அதிமுக தள்ளப்பட்டது. இந்த தேர்தலை பொறுத்தவரை பொதுச் செயலாளர் பழனிசாமியும் தன் செல்வாக்கை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.

இந்நிலையில், நேற்று பிற்பகல் முதல் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தனது வீட்டில் நிர்வாகிகளுடன் தொடர் ஆலோசனை நடத்தினார். அதில் தேமுதிகவுடனான கூட்டணி, மற்ற கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்குவது, வேட்பாளர் பட்டியல் வெளியிடுவது ஆகியவை குறித்து ஆலோசனை நடத்தினார். அதன்படி, தற்போது 16 வேட்பாளர்கள் அடங்கிய பட்டியலை இபிஎஸ் வெளியிட்டுள்ளார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal