2024 லோக்சபா தேர்தலில் பாமக யாருடன் கூட்டணி வைக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த கூட்டணி தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் – தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையே கருத்து வேறுபாடு நிலவுவதாக கூறப்படுகிறது. ராமதாஸ், அதிமுக கூட்டணியையும் ; அன்புமணி, பாஜக கூட்டணியையும் விரும்புகிறார்கள்.

பாஜக உடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று அன்புமணி நினைக்கிறாராம். கிட்டத்தட்ட ஆடம் பிடிக்கிறாராம். பாஜகவுடன் கூட்டணி வைத்தால்.. எப்படியும் பாஜக மீண்டும் வெல்லும்.. அதன் மூலம் லோக்சபா தேர்தலில் நாமும் வென்று அமைச்சர் ஆகலாம் என்று அன்புமணி நினைக்கிறாராம். அதன்படி லோக்சபா தேர்தலில் அன்புமணிக்கு தர்மபுரி தொகுதியை மீண்டும் கொடுக்க வேண்டும். அங்கே திமுக தற்போது வலிமை இழந்துவிட்டது.

அன்புமணி அங்கே வெற்றிபெறும் பட்சத்தில் அவருக்கு அமைச்சர் பதவி கொடுக்க வேண்டும். மொத்தமனாக 10 இடங்களில் போட்டியிட வாய்ப்பு கொடுக்க வேண்டும். இல்லையென்றால் இடங்களை குறைத்துக்கொண்டு.. அன்புமணிக்கு “மீண்டும்” ராஜ்ய சபை செல்ல வாய்ப்பு + அமைச்சர் பதவி கொடுக்க வேண்டும் என்று பாமக சார்பாக பாஜகவிடம் அன்புமணி கோரிக்கை வைத்து உள்ளாராம்..

ஆனால் அன்புமணியின் இந்த திட்டத்தை ராமதாஸ் விரும்பவில்லையாம். பாஜகவுடன் இருந்தால் தமிழ்நாட்டில் பாமகவிற்கு மரியாதை குறையும். அதனால் பாமக அதிமுக கூட்டணியே சரியாக இருக்கும். 2026 சட்டசபை தேர்தலுக்கு இதுதான் சரியாக இருக்கும் என்பதால்.. 2024லும் அதிமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டும். அதே கூட்டணி தொடர வேண்டும் என்று ராமதாஸ் நினைக்கிறாராம். மேலும் பாமகவை உடைக்க பாஜக முடிக்க பார்க்கிறது. அதனால் பாஜகவோடு சேருவது சரியாக இருக்காது என்று ராமதாஸ் நினைக்கிறாராம். இதனால் ராமதாஸ் – அன்புமணி இடையே கூட்டணி விவகாரத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு உள்ளதாம்.

அவரவர்களின் விருப்பத்துக்கேற்ப காரணங்கள் சொல்லப்படுகிறது. அந்த காரணங்கள் அவரவர் தரப்பில் நியாயமானதாக இருக்கிறது. இதனால் முடிவு எடுப்பதில் தைலாபுரம் தோட்டம் தடுமாறிக்கொண்டிருக்கிறது. அதிமுகவுடன் 99 சதவீதம் கூட்டணி யை உறுதிப்படுத்தி வைத்திருந்தார் ராமதாஸ். அதற்கேற்ப, சென்னை வந்த ராமதாசை, அதிமுக பேச்சுவார்த்தைக் குழு சந்திப்பதாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் வெளிப்படையாக பேச்சுவார்த்தை எதுவும் நடக்கவில்லை.

இந்த நிலையில்தான் பாமகவை கூட்டணிக்குள் கொண்டு வருவதற்காக எடப்பாடி பழனிசாமி மிகப்பெரிய ஆஃபர் ஒன்றை பாமகவிற்கு கொடுத்துள்ளாராம். அதிமுக சார்பாக பாமகவின் நிறுவனர் ராமதாஸிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இப்போது வைக்கும் கூட்டணியை 2026லும் தொடரலாம். நாம் சேர்ந்தால் சில இடங்களில் 2ம் இடம் அல்ல வெற்றிபெறும் வாய்ப்பு கூட உள்ளது. பாஜக கூட்டணியில் அதற்கு வாய்ப்பு இல்லை.

அன்புமணியிடம் பேசுங்கள். நீங்கள் விரும்பும் தொகுதியை கண்டிப்பாக கொடுக்கிறோம் என்று அதிமுக சார்பாக பேசப்பட்டு வருகிறதாம். எடப்பாடியின் சொந்த மாவட்டத்தில் உள்ள சேலம் தொகுதியை கூட கொடுக்கிறோம். அதை எடுத்துக்கொள்ளுங்கள். நீங்களே நில்லுங்கள். ஆனால் பாமக கூட்டணிக்கு மட்டும் வந்துவிடுங்கள் என்று எடப்பாடி கோரிக்கை விடுத்துள்ளாராம்.

அதே சமயம் இன்னொரு பக்கம் பாஜக – பாமக கூட்டணி பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளதாம். கிட்டத்தட்ட இரண்டு கட்சிகளுக்கும் இடையில் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகும் சூழல் ஏற்பட்டு உள்ளது. பாமக இறங்கி வந்து 10 லோக்சபா சீட் + அமைச்சர் பதவி என்றுள்ளதாம். இதையடுத்து 10 லோக்சபா சீட் ஓகே + மத்திய பிரிவுகளில் பெரிய பதவி ஒன்று + பாமகவில் ஒருவர் எம்பி ஆனால் அமைச்சர் பதவி பற்றி பார்க்கலாம் என்று பாஜக சொல்லி இருக்கிறதாம். இதை பாமக ஏற்றுக்கொண்டதாக தகவல்கள் வருகின்றன.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal