‘தமிழக அரசை கலைப்பது குறித்து யோசித்துதான் பார்க்கட்டுமே?’ என்று அமைச்சர் உதயநிதி கூறினார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற திமுக இளைஞரணி செயல் வீரர்கள் கூட்டம், கட்சியின் முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, நூலகங்கள் திறப்பு விழா மற்றும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி பங்கேற்றார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ‘‘மத்திய இணையமைச்சர் எல்.முருகன் ‘பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு இதுவரை எந்த மாநில அரசையும் கலைத்ததில்லை. தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது. ஆளுநருக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்பட்டுள்ள நிலையிலும், தமிழக அரசை கலைக்கும் யோசனை இல்லை’ என்று தெரிவித்துள்ளார்.

தமிழக அரசை கலைப்பது குறித்து யோசித்துதான் பார்க்கட்டுமே. என்ன நடக்கிறது என்று தமிழக மக்களுக்கு நன்றாகவே தெரியும். நடந்த சம்பவம் குறித்து டிஜிபி விளக்கம் அளித்து இருக்கிறார். விசாரணையும் நடைபெற்று வருகிறது”இவ்வாறு உதயநிதி கூறினார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal