ஜெயிலர் திரைப்படம் மூலம் பிரபலமான நடிகர் விநாயகன், கேரளாவின் எர்ணாகுளம் காவல் நிலைய போலீசாரால் தற்பொழுது கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.

ஜெயிலர் திரைப்படத்தின் மூலம் பிரபலமான நடிகர் தான் விநாயகன், இவர் ஏற்கனவே தமிழில் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே. மலையாள மொழியில் சிறந்த வில்லனாகவும், குணச்சித்திர நடிகராகவும் திகழ்ந்து வந்த விநாயகன் எர்ணாகுளம் காவல் நிலையத்தில் தற்போது வைக்கப்பட்டுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

குடிபோதையில் அவர் தகராறு செய்ததாகவும், அதனால் அவர் மீது வழக்கு பதிவு செய்து எர்ணாகுளம் காவல் நிலையத்தில் தற்போது வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இது குறித்து சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ ஒன்றும் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

நடிகர் விநாயகன், எர்ணாகுளம் டவுன் வடக்கு காவல் நிலையத்தில், இன்று மாலையில் ஒரு சலசலப்பை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது. அதற்கு முன்னதாக அவர் தனது குடியிருப்பு பகுதியில் சில பிரச்சினைகளை உருவாக்கியதாகக் கூறி அவரை போலீஸார் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.

அப்போது காவல் நிலையத்திற்கு சென்ற விநாயகன், காவல்நிலையத்தில் பிரச்சனை செய்ததற்காகவும், அதன் பிறகு அவர் கைது செய்யப்பட்டதாக மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதனையடுத்து “மருத்துவ பரிசோதனைக்காக அவர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்,” என்று அதிகாரி மேலும் கூறினார்.

கடந்த 28 ஆண்டுகாலமாக மலையாள திரை உலகில் நடித்து வரும் நடிகர் விநாயகன் தமிழில் முதல் முறையாக விஷால் நடிப்பில் வெளியான திமிரு திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு சிம்புவின் சிலம்பாட்டம் மற்றும் காலை, கார்த்தியின் சிறுத்தை, தனுஷின் மரியான் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இவை அனைத்தையும் தாண்டி ஜெயிலர் திரைப்படத்தில் சூப்பர் ஸ்டாருக்கு வில்லனாக நடித்து இவர் புகழின் உச்சிக்கே சென்றார் என்றார் என்று மிகையல்ல.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal