தமிழ்நாட்டில் கோயில் சொத்துகள் ஆக்கிரமிப்பு குறித்து பிரதமர் நரேந்திர மோடி கூறிய தகவல் உண்மைதான் என்று, திருப்பூரில் முன்னாள் ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் தெரிவித்தார்.
திருப்பூர் கூலிபாளையம் பகுதியில் மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டிலுள்ள சுக்ரீஸ்வரர் ஆலயத்தில் நேற்று தரிசனம் செய்த அவர், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ‘‘தமிழகத்தில் ஆவணங்களின் அடிப்படையில் 4 லட்சத்து 78 ஆயிரம் ஏக்கர் கோயில் நிலங்கள் இருப்பதாக தெரிவிக்கப்படும் நிலையில், 5 ஆயிரம் ஏக்கர் மட்டுமே இதுவரை அரசு கையகப்படுத்தி இருப்பதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவிக்கிறார். எஞ்சிய இடங்கள் தற்போது பயன்பாட்டில் இருப்பதை ஏன் அரசு கண்டுகொள்ளவில்லை.
தமிழ்நாட்டில் கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பு தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடி ஒரு கருத்தை தெளிவுபடுத்தியுள்ளார். அது உண்மை. இதை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மறுப்பாரானால், நான் விவாதிக்க தயாராக உள்ளேன். முதல்வர் ஸ்டாலின் சொல்வது பொய். பிரதமர் மோடி கூறுவது பொய் என்றால், முதல்வர் ஸ்டாலின் அதற்கு தகுந்த ஆவண, ஆதாரங்களை வெளிப்படைத்தன்மையோடு வெளியிட வேண்டும். தொடர்ந்து கோயில் நிலங்களை மட்டும் கையகப்படுத்தி, அரசு அலுவலகங்களுக்கு பயன்படுத்தும் அரசு, ஏன் மற்ற மதங்களின் நிலத்தை கையகப்படுத்தவில்லை’’ இவ்வாறு அவர் கூறினார்.