தி.மு.க. அமைச்சர்கள் மீது நீதிமன்றம் தாமாகவே முன்வந்து வழக்குகளை பதிவு செய்து வருகிறது ஒருபுறம். மறுபுறம் அமலாக்கத்துறையும் ‘விடாமல் விரட்டி’ வருகிறது. இன்றைய தினம் நடக்கும் சோதனை செந்தில் பாலாஜிக்கு நெருக்கமான இடத்தில் நடக்கிறது என்றாலும், தி.மு.க.வில் உள்ள சீனியரை ‘வளைக்கும்’ விதமாகத்தான் இந்த ரெய்டு நடக்கிறது என்கிறார்கள் விபரமறிந்தவர்கள்!

இது பற்றி தமிழக அரசியல் பார்வையாளர்கள் சிலரிடம் பேசினோம்.

‘‘திமுக அமைச்சர்களை குறிவைத்து அமலாக்கத்துறை தொடர்ந்து சோதனைகளை முடுக்கிவிட்டு வருகிறது. நான்கு மாதங்களுக்கு முன்பாக கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இன்னும் ஜாமீன் கிடைக்கவில்லை. உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவரது மகனும் எம்.பியுமான கௌதம சிகாமனி ஆகியோர் தொடர்புடைய இடங்களில் சோதனை நடைபெற்றது. அமலாக்கத்துறை அலுவலகங்களில் விசாரணையும் நடைபெற்றன.

இந்த சூழலில் அடுத்து எந்த அமைச்சரை அமலாக்கத்துறை குறிவைக்கப் போகிறது என்பது குறித்த பேச்சு தமிழக அரசியல் களத்தில் கடந்த சில மாதங்களாகவே எதிரொலித்து வருகிறது.

இந்நிலையில் இன்று அமலாக்கத்துறையினர் தமிழ்நாட்டில் 30க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை, வேலூர், திருச்சி, கரூர், புதுக்கோட்டை, திருவள்ளூர் என பல மாவட்டங்களில் மணல் குவாரி அலுவலகங்கள், மணல் விற்பனை செய்யும் இடங்கள், மணல் ஒப்பந்ததார்கள் அலுவலகர்கள் என பல இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

நீர்வளம் மற்றும் கனிம வளத்துறைகளை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அமைச்சர் துரைமுருகனை குறிவைக்கும் வகையில் தான் மணல் குவாரிகளில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டுள்ளதாக சொல்கிறார்கள்.

மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் பாஜகவுக்கு எதிராக இந்தியா கூட்டணியை உருவாக்கியதில் திமுகவுக்கு கணிசமான பங்கு உள்ளது. இதனால் கடந்த சில மாதங்களாக திமுகவை வலுவாக அட்டாக் செய்து வருகிறது பாஜக. தமிழ்நாடு தொடர்புடைய கூட்டங்கள் என்றில்லாமல் பிற கூட்டங்களிலும் திமுகவை பற்றி மோடியும், அமித் ஷாவும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

அண்மையில் அமைச்சர் உதயநிதியின் சனாதனம் தொடர்பான பேச்சு சர்ச்சையாக்கப்பட்டது. அதன் மூலம் திமுகவை பிற கட்சிகளிடமிருந்து அந்நியப்படுத்தும் வேலையை பாஜக பார்க்கத்தொடங்கியது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் திமுக மீது மேலும் சில அழுத்தங்களை கொடுக்க திட்டமிட்டுள்ளது பாஜக. அதன் வெளிப்பாடாகவே தற்போது நடைபெறும் மணல் குவாரிகள் ரெய்டு’’ என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

எனவே, அடுத்த குறி தி.மு.க.வின் சீனியருக்கே வைத்திருக்கிறது அமலாக்கத்துறை..? அடுத்தது முக்கியத்துறைகளை கைவசம் வைத்திருக்கும் ஒரு அமைச்சரும் சிக்குவார் என்கிறார்கள்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal