சின்னமனூர் அருகே எரசக்கநாயக்கனூரில் பெண்கள் கழிப்பிடம் அருகே டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இந்த கடையை அகற்ற கோரி கிராம மக்கள் பலமுறை கோரிக்கை வைத்தனர். ஆனால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் மற்றும் மார்க்சிஸ்ட்டு கம்யூனிஸ்ட்டு கட்சியினர் எரசக்கநாயக்கனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஒன்றுகூடினர்.

அங்கிருந்து ஊர்வலமாக வந்து டாஸ்மாக் கடையை முற்றுகையிட முயன்றனர். போடி டி.எஸ்.பி. பெரியசாமி தலைமையில் ஏராளமான போலீசார் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டனர். அவர்கள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த நிலையில் திடீரென சின்னமனூர்-கம்பம் சாலையில் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஒரு மாதத்திற்குள் டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததால் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal