“தேர்தல் ஆணையத்தை மோசடி இயந்திரமாக பாஜக மாற்றிவிட்டது.” என்று சாடியுள்ளார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். மேலும், வாக்குத் திருட்டுக்கு எதிராக ராகுல் காந்தி முன்னெடுக்கும் போராட்டுத்துக்கு திமுக தோளோடு தோள் கொடுக்கும் என்றும் உறுதியளித்துள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்த பதிவில், “தேர்தல் ஆணையத்தை மோசடி இயந்திரமாக பாஜக மாற்றிவிட்டது. பெங்களூரு மஹாதேவபுரா தொகுதியில் நடந்தது ஏதோ நிர்வாகத் தவறு அல்ல. அது, வாக்கு திருட்டுக்காக அரங்கேற்றப்பட்ட திட்டமிட்ட சதி. வாக்கு திருட்டுப் பற்றி எனது சகோதரர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அளித்த ஆதாரங்கள் இந்த மோசடியின் வீச்சை காட்டுகிறது.
இன்று இண்டியா கூட்டணி எம்.பி.க்களுடன் ராகுல் காந்தி தேர்தல் ஆணையம் நோக்கி பேரணி மேற்கொள்கிறார். இந்தச் சூழலில், ஒவ்வொரு மாநிலத்துக்கும் கணினி மூலம் சரிபார்க்கக் கூடிய வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். இது அரசியல் ஆதாயத்துக்காக வாக்காளர்களை நீக்கும் முயற்சியை முறியடிக்கும். ஜனநாயக தாக்குதலான வாக்குத் திருட்டு விவகாரத்தில் விசாரணை தேவை. திமுக இந்தப் போரில் தோளோடு தோள் நிற்கிறது. வெட்டவெளிச்சமாக இந்திய ஜனநாயகத்தை பாஜக திருடுவதை நாங்கள் மவுனமாக வேடிக்கை பார்க்க மாட்டோம்.” என்று பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, மகாராஷ்டிரா, கர்நாடகா, ஹரியானா போன்ற மாநிலங்களில் ஏராளமான வாக்காளர்கள் போலியாக சேர்க்கப்பட்டுள்ளனர். ஏராளமான வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி குற்றம் சாட்டி இருந்தார்.
மேலும், நேற்று அவர் ராகுல் காந்தி, தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில், “வாக்கு திருட்டு என்பது ஒருவருக்கு ஒரு வாக்கு என்ற அடிப்படை நோக்கத்தின் மீது நடத்தப்படும் தாக்குதலாகும். தெளிவான வாக்காளர் பட்டியல் என்பதுதான், நேர்மையான சுதந்திரமான தேர்தலை உறுதி செய்யும். தேர்தல் ஆணையத்திடம் நாங்கள் வைக்கும் கோரிக்கை எல்லாம் தெளிவாக உள்ளது. தேர்தல் ஆணையம் வெளிப்படையாக செயல்பட வேண்டும்.
மின்னணு வாக்காளர் பட்டியலை வெளியிட வேண்டும். அப்போதுதான் நாட்டு மக்களும் அரசியல் கட்சிகளும் அதை ஆய்வு செய்ய முடியும். எங்களுடைய இந்த கோரிக்கையை வலியுறுத்தி பிரச்சாரம் தொடங்குகிறோம். அதற்காக ‘லீttஜீ://ஸ்ஷீtமீநீலீஷீக்ஷீவீ.வீஸீ/மீநீபீமீனீணீஸீபீ’ என்ற புதிய இணையதளத்தை தொடங்கி வைக்கிறோம். அத்துடன் 96500 03420 என்ற செல்போன் எண்ணையும் வெளியிடுகிறோம். இணையதளத்தில்பொதுமக்கள் தங்கள் கருத்துகளைக் கூறி, பிரச்சாரத்தில் பங்கேற்க வேண்டும். செல்போனில் மிஸ்டு கால் கொடுத்து பிரச்சாரத்தில் இணையலாம்.” என்று கூறியிருந்தார். இந்நிலையில் இன்று பிரம்மாண்டப் பேரணி நடைபெறவுள்ளது.
