‘நீ என்னை விட சிறியவன்… என்னை மறந்துவிடு…’ என்று சொன்ன நண்பனின் அக்காவை கழுத்தை நெறித்து கொன்றிருக்கிறார் சிறுவன்.

தர்மபுரி நகராட்சி எட்டாவது வார்டு திமுக கவுன்சிலர் புவனேஸ்வர். 23 வயதான இவரது மகள் ஹர்ஷா ஓசூரில் உள்ள தனியார் மருந்து நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். விடுதியில் தங்கி பணிக்கு சென்றுவந்த அவர் அதியமான் கோட்டை வனப்பகுதியில் சடலமாகக் கிடந்தார். இது தொடர்பாக அதியமான் கோட்டை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர்.

ஹர்ஷா கடைசியாக ஒரு 17 வயது சிறுவனுடன் செல்போனில் பேசியது கண்டுபிடிக்கப்பட்டது. அந்தச் சிறுவனிடம் விசாரணை நடத்திய போலீசாருக்கு அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் கிடைத்தன. ஹர்ஷாவின் தம்பியும் அவரும் கல்லூரியில் நண்பர்களாக இருந்துள்ளனர். 12ஆம் வகுப்பை முடித்ததும் சிறுவனுக்கும் ஹர்ஷாவுக்கும் பழக்கம் ஏற்பட்டு, பின்னர் அது காதலாக மாறியுள்ளது.

அப்போது, ஹர்ஷா ஓசூரில் வேலை கிடைத்து அங்கு சென்றுவிட்டார். ஹர்ஷாவுக்கு வேலை கிடைத்ததும் குடும்பத்தினர் அவருக்கு திருமணம் செய்துவைக்க ஏற்பாடுகளைத் தொடங்கிவிட்டனர். ஹர்ஷாவும் சிறுவனுடன் பேசுவதை குறைத்துக்கொண்டிருக்கிறார். சிறுவன் ஹர்ஷாவை நேரில் சந்திக்க விரும்பியதால் அவர் கடந்த செவ்வாய்க்கிழமை தர்மபுரிக்கு வந்துள்ளார். அங்கிருந்து இருவரும் பைக்கில் நரசிங்கபுரம் கோம்பைக்கு சென்றுள்ளனர்.

அங்கு இருவரும் நீண்ட நேரம் பேசியுள்ளனர். அப்போது ஹர்ஷா தனக்குத் திருமண ஏற்பாடு நடப்பதைப் பற்றித் தெரிவித்துள்ளார். மேலும், சிறுவனின் வயதைக் காரணம் காட்டி, தன்னை மறந்துவிடுமாறு கூறியுள்ளார். அதை ஏற்காத சிறுவனுக்கும் ஹர்ஷாவுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. கோபம் அடைந்த சிறுவன் ஹர்ஷாவின் துப்பட்டாவைப் பறித்து அவரது கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார். பின், ஹர்ஷாவின் உடலை பாறை மறைவில் ஒளித்து வைத்துவிட்டு அங்கிருந்து சென்றிருக்கிறார்.

இந்த வாக்குமூலத்தை அடுத்து போலீசார் சிறுவனை தர்மபுரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைத்தனர். இது தொடர்பாக காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal