அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள், பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்த வழக்குகளில் சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. கட்சி நிர்வாகிகளையும், தொண்டர்களையும் நம்பாமல் நீதிமன்றத்தையே நம்பிய ஓ.பன்னீர்செல்வத்தின் அரசியல் அஸ்தமனத்தை நோக்கியே நகர்கிறது.

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிக்கப்பட்டதை அடுத்து, தேர்தலுக்கு தடை கோரி ஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிராபகர் ஆகியோர் தனித்தனியாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்குடன் பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை கோரி ஓபிஎஸ்சும் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்குகள் அனைத்தும் நீதிபதி குமரேஷ்பாபு முன்பு கடந்த 22ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, ஓபிஎஸ் தரப்பில் வாதிடுகையில்;- கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள்தான் பொதுச்செயலாளர் பதவியை தேர்வு செய்ய முடியும். அந்த விதியை பொதுக்குழு உறுப்பினர்கள் திருத்த முடியாது. விதிகளை மீறி யாரும் போட்டியிடாதவாறு இடைக்கால பொதுச்செயலாளர் பதவியை கொண்டு வந்துள்ளனர். தேர்தல் ஆணையம் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளையே அங்கீகரித்துள்ளது.

தற்போது பொதுக்குழு உறுப்பினர்களாக இருப்பவர்கள், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரால் தேர்வு செய்யப்பட்டு நியமிக்கப்பட்டவர்கள். ஜூன் 23ம் தேதி பொதுக்குழுவில் தீர்மானங்கள் முன் வைக்கப்படாத நிலையில் இரட்டை தலைமை காலாவதியாகிவிட்டதாக எப்படி கூற முடியும்? ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகி விட்டதாக எந்த நீதிமன்றமும் அறிவிக்கவில்லை. 1977ம் ஆண்டு முதல் கட்சியில் இருக்கும் ஓ.பன்னீர்செல்வம் முதல்வராகவும், நிதி அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். கட்சிக்கு நெருக்கடி ஏற்பட்ட நேரங்களில் ஓ.பன்னீர்செல்வம் கட்சிக்காக முக்கிய பங்காற்றியுள்ளார். பெரும்பான்மை உள்ளதால் எந்த முடிவும் எடுக்க முடியும் எனக் கூறி முடிவெடுத்துள்ளனர். நிபந்தனைகளை நீக்கினால் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிட தயார் என ஓபிஎஸ் தரப்பில் வாதிடப்பட்டது.

இதற்கு பதிலளித்து அதிமுக மற்றும் இபிஎஸ் தரப்பில்;- ஓபிஎஸ் தனக்கென தனி கட்சியை நடத்தி வருகிறார். அதிலிருந்து எங்கள் தரப்பினரை நீக்கி, புதிதாக நிர்வாகிகளை நியமித்திருக்கிறார். எடப்பாடி பழனிசாமிதான் இடைக்கால பொது செயலாளர் என்று உலகத்துக்கே தெரியும். நீக்க நடவடிக்கையால் யாருக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பு ஏற்படவில்லை. மீண்டும் பொதுச்செயலாளர் பதவியை கொண்டு வருவதில் எந்த தவறும் இல்லை என்றார். அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவு பெற்ற நிலையில் தீர்ப்பை நீதிபதி தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்திருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதில், அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல், பொதுக்குழு தீர்மானங்கள் எதிர்த்து ஓபிஎஸ் தாக்கல் செய்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. ஜூலை 11ம் தேதி அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என்றார். இதனையடுத்து, சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளராகிறார் எடப்பாடி பழனிசாமி தேர்வாகியுள்ளார்.

இதற்கிடையே அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் பொறுப்பாளர்கள் நத்தம் விஸ்வநாதன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் அறிவித்திருக்கின்றனர்.

ஆக. அ.தி.மு.க.வில் ஒன்மேன் ஆர்மியாகிவிட்டார் எடப்பாடி பழனிசாமி!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal