தமிழகத்தில் முன்னெப்போதும் இல்லாத வண்ணம், காவல்நிலையத்திற்குள்ளேயே புகுந்து நேரடியாக வன்முறை வெறியாட்டம் நடத்தும் அராஜக திமுகவினரால், இந்த ஆட்சியில் சட்டம் ஒழுங்கு ரவுடிகளின் கட்டுப்பாட்டில் உள்ளதோ என்ற சந்தேகம் எழுகிறது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

திமுகவில் பல்வேறு மாவட்டங்களில் உட்கட்சி மோதல் தொடர்ந்து நீடித்து வருகிறது. தற்போது திருச்சி மாவட்டத்தில் அந்த மோதல் கலவரமாக மாறியுள்ளது. திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா வீட்டு அருகில் இறகு பந்து அரங்கத்தின் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் கேஎன் நேரு கலந்து கொண்டுள்ளார். இறகு பந்து அரங்கத்தின் திறப்பு விழா கல்வெட்டில் திமுக எம்பி சிவாவின் பெயர் இடம் பெறவில்லையென கூறப்படுகிறது. மேலும் வரவேற்பு பேனரிலும் சிவாவின் பெயர் இடம் பெறவில்லை என்ற காரணத்தினால் சிவாவின் ஆதரவாளர்கள், அமைச்சர் கே.என்.நேருக்கு கருப்புக்கொடி காட்டி, நேருவின் வாகனத்தை மறித்து நேருக்கு எதிராக கோஷம் எழுப்பியுள்ளனர். இதன் காரணமாக அமைச்சர் நேருவின் ஆதரவாளர்களும், திருச்சி சிவாவின் ஆதரவாளர்களும் மோதிக்கொண்டுள்ளனர்.

ஒரு கட்டத்தில் திருச்சி சிவா ஆதரவாளர்களை போலீஸ் நிலையத்திற்கு காவல்துறையினர் அழைத்து சென்றுள்ளனர். இந்தநிலையில் காவல்நிலையத்திற்குள் புகுந்த அமைச்சர் நேருவின் ஆதரவாளர்கள், போலீசார் முன்னிலையில், திருச்சி சிவா ஆதரவாளர்களை சரமாரியாக தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் பெண் போலீசாருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில் இது தொடர்பாக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,

‘‘தமிழகத்தில் முன்னெப்போதும் இல்லாத வண்ணம், காவல்நிலையத்திற்குள்ளேயே புகுந்து நேரடியாக வன்முறை வெறியாட்டம் நடத்தும் அராஜக திமுகவினரால், இந்த ஆட்சியில் சட்டம் ஒழுங்கு ரவுடிகளின் கட்டுப்பாட்டில் உள்ளதோ என்ற சந்தேகம் எழுகிறது. ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் இந்த அரசு நீடிக்கும் ஒவ்வொரு நிமிடமும் தமிழகத்துக்கு அச்சுறுத்தலாகவும், பொது அமைதிக்கு ஆபத்தாகவும் இருப்பதை மக்கள் உணரத் துவங்கியுள்ளனர். காவல்துறையை தன்வசம் வைத்துள்ள முதல்வர் இதற்கு என்ன பதில் சொல்ல போகிறார்?’’ என எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழகத்தில் தி.மு.க. அட்சிக்கு எந்தவொரு அவப்பெயரும் வந்துவடக்கூடாது என நினைக்கும் முதல்வருக்கு, இந்த விவகாரம் பெரிய அவப்பெயரை ஏற்படுத்தியிருக்கிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal