முதலமைச்சர் ஸ்டாலினுடன் செல்லி எடுக்கவும், தொலைபேசியில் பிறந்தநாள் வாழ்த்து சொல்லவும் திமுகவின் தகவல் தொழில்நுட்ப அணி புதிய முயற்ச்சி எடுத்துள்ளது. இதற்காக தொலைபேசி எண்ணையும் அறிவித்துள்ளது.

திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா மார்ச் 1 ஆம் தேதி தமிழகம் முழுவதும் திமுகவினரால் உற்சாகமாக கொண்டாடப்படவுள்ளது. தமிழகம் முழுவதும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இன்று மாலை முதலமைச்சர் ஸ்டாலின் தொடர்பான புகைப்பட் கண்காட்சியை மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தொடங்கிவைக்கவுள்ளார். மேலும் சிறப்பு கருத்தரங்கம், பட்டிமன்றம், மருத்துவ முகாம்களும் நடைபெறவுள்ளது. நாளை காலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது தந்தையும், முன்னாள் முதலமைச்சருமான கலைஞர் கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்துகிறார். இதனை தொடர்ந்து தந்தை பெரியார், அறிஞர் அண்ணா ஆகியோரின் நினைவிடங்களுக்கு செல்லும் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்திகிறார்.

இதனையடுத்து அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் தொண்டர்களை சந்தித்து வாழ்த்துகளை பெற்றுக்கொள்கிறார். மாலை ஒய்எம்சிஏ அரங்கில் அகில இந்திய தலைவர்கள் கலந்துகொள்ளும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளார். இந்தநிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினோடு செல்பி எடுக்கவும், தொலபேசி வாயிலாக பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கவும் திமுக ஐடி பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பாக திமுகவின் தகவல் தொழில்நுட்ப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக ஆட்சிக்கு வந்து இரண்டே ஆண்டுகளில் தமிழகத்தில் பெண்களுக்கு பேருந்தில் இலவச பயணம், குழந்தைகளுக்காட தொலைநோக்கு திட்டம், வேலைவாய்ப்பு உருவாக்குதல், என பல்வேறு திட்டங்களை செயல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு இரண்டு புதுமையான வழிகளை அறிமுகப்படுத்தியுள்ளது, இதன் மூலம் கட்சி தொண்டர்கள் மற்றும் இந்தியா முழுவதும் உள்ள முதல்வரின் நலம் விரும்பிகள் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 07127 191333 என்ற தொலைபேசி எண் வாயிலாக இன்று முதல் வருகிற 2 ஆம் தேதிவரை தங்களது வாழ்த்துகளை தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது. மற்றொன்று QR குறியீடு மூலமாக www.selfiewithCM.com என்ற இணையதளத்தில் முதலமைச்சர் ஸ்டாலினுடன் செல்பி எடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal