மதுரையில் துணை நடிகை ஒருவர் நடுரோட்டில் சண்டையிட்ட சம்பவம்தான் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மதுரை பழங்காநத்தம் பைபாஸ் சாலையில் சொகுசு காரின் உள்ளே இளம்ஜோடி சண்டை போட்டுள்ளனர். இதையடுத்து காரில் இருந்து இறங்கிய அவர்கள் நடுரோட்டில் ஆக்ரோஷமாக சண்டையிட்டனர். இதை பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக எஸ் எஸ் காலனி போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு போலீஸார் விரைந்து வந்தனர். சண்டையிட்ட இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி பகுதியைச் சேர்ந்த விஸ்வநாத் பட்டாச்சாரியா என்பவரின் மகள் அங்கீதா விஸ்வநாத் என தெரியவந்தது. அவர் துணை நடிகையாக இருக்கிறார்.

இவருடைய ஆண் நண்பர் பீகார் மாநிலம், ராம்நகர் வெஸ்ட் பகுதியைச் சேர்ந்த நிதிஷ்குமார் என்பவருடன் மும்பையில் இருந்து கோவையில் நடைபெற்ற மகா சிவராத்திரி விழாவில் கலந்து கொண்டுள்ளார். இதையடுத்து கோவையில் வாடகைக்கு கார் எடுத்து கொண்டு இருவரும் கோவைக்கு அருகே உள்ள இடங்களை சுற்றி பார்க்க திட்டமிட்டனர்.

இதனால் மதுரையில் நேற்றைய தினம் விடுதி ஒன்றில் தங்கிய இருவரும் ராமேஸ்வரம் செல்ல தயார் நிலையில் இருந்தனர். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் இருவரும் நண்பர்களாக பழகி வரும் நிலையில் தன்னிடம் நிதிஷ்குமார் தவறாக நடந்து கொள்ள முயற்சித்தார் என்றும் தனது பணத்தை எடுத்துக் கொண்டதாகவும் குற்றச்சாட்டிய நிலையில் இதனால்தான் தகராறு நிகழ்ந்தது என்றார்.

இதையடுத்து இருவரையும் விசாரணை செய்த காவல் நிலைய போலீஸார் உடனே இருவரும் தங்களது சொந்த ஊருக்குச் செல்ல வேண்டும் என எச்சரித்தனர். ஊருக்கு போகாமல் மீண்டும் சண்டையிட்டு கொண்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் தெரிவித்தனர். அவர்களுடைய ஆதார் ஆவணங்களை போலீஸார் புகைப்படம் எடுத்து கொண்டனர்.

மேலும் அவர்களின் போன் எண்ணையும் வாங்கிக் கொண்டனர். பின்னர் அவர்கள் எப்படி வந்தனர் என்பது குறித்தும் விசாரித்தனர். மேலும் கஞ்சா, மது உபயோகித்திருந்தனரா என்பதையும் போலீஸார் சோதனையிட்டனர். இதையடுத்து இருவரையும் அனுப்பி வைத்தனர். மும்பையிலிருந்து மதுரை வந்த போது சண்டையிட்டுக் கொண்ட துணை நடிகை மற்றும் அவரது ஆண் நண்பரால் பரபரப்பு ஏற்பட்டது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal