தி.மு.க. அரசு கொண்டு வந்துள்ள இலவச பேருந்து திட்டத்தால் பெண்கள் இன்பமாக பயணித்து வருகின்றனர். அதற்கு ஈரோடு கிழக்கில் தி.மு.க. பெறும் வெற்றியே சாட்டி என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் கூறியிருக்கிறார்.

ஈரோட்டில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

‘‘ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலில் தி.மு.க. கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு ஆதரவு கேட்டு செல்லும் இடமெல்லாம் பொதுமக்கள் சிறப்பான வரவேற்பு அளித்து வருகிறார்கள். தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பெண்களுக்கு இலவச பயணம், புதுமை பெண் திட்டம் போன்றவை மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இலவச பேருந்து திட்டத்தில் இதுவரை 233 கோடியே 71 லட்சம் முறை பெண்கள் அரசு பஸ்சில் இலவச பயணம் செய்துள்ளனர். நாள் ஒன்றுக்கு சராசரியாக 40 லட்சம் பெண்கள் இலவச பயணம் செய்து வருகின்றனர். இலவச பேருந்து பயண திட்டம் ஏழை பெண்களுக்கு மிகவும் உதவிகரமாக உள்ளது. இதன் மூலம் 800 முதல் ஆயிரம் ரூபாய் வரை குடும்பத்திற்கு மிச்சப்படுகிறது’’ இவ்வாறு அவர் கூறினார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal