கர்நாடக மாநிலத்தில் வருகிற மே மாதம் சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதால், பி.ஜே.பி.யின் முழு கவனமும் கர்நாடகத்தை நோக்கியே இருக்கிறது. இதனால் கர்நாடகா மாநிலத்தில் பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்து வருகிறார். அண்மையில் 2 முறை கர்நாடகாவுக்கு பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டிருந்தார். இதனைத் தொடர்ந்து மீண்டும் பிரதமர் மோடி கர்நாடகா செல்ல உள்ளார்.

பாதுகாப்புத்துறையில் தற்சாற்பு அடையும் அடுத்த கட்ட முயற்சியாக, கர்நாடகாவின் துமகுருவில் ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்கல் நிறுவனத்தின், ஹெலிகாப்டர் தொழிற்சாலையை பிரதமர் நாட்டிற்கு நாளை அர்ப்பணிக்கிறார். 615 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்தப் பசுமை ஹெலிகாப்டர் தொழிற்சலை, ஹெலிகாப்டர் சார்ந்த அனைத்து தேவைகளுக்கும் ஒற்றைத் தீர்வாக அமையும். இந்தியாவின் மிகப்பெரிய ஹெலிகாப்டர் உற்பத்தி நிறுவனமான இந்த நிறுவனம், துவக்கத்தில் இலகு ரக ஹெலிகாப்டர்களை (எல்யூஹெச்) உற்பத்தி செய்யும்.

எல்யூஹெச் என்பது உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட 3 டன் கிளாஸ், ஒற்றை இன்ஜின் கொண்ட பல்முனைப் பயன்பாட்டு ஹெலிகாப்டர் ஆகும். ஆரம்ப முயற்சியாக இந்த தொழிற்சாலையில் ஆண்டுக்கு 30 ஹெலிகாப்டர்கள் உற்பத்தி செய்யப்படும். பின்னர் இதன் அளவு படிப்படியாக ஆண்டுக்கு 60 மற்றும் 90 என பல்வேறு கட்டங்களாக அதிகரிக்கப்படும். முதல் எல்யூஹெச் தற்போது பரிசோதனைகளைக் கடந்து, அறிமுகத்திற்குத் தயாராக இருக்கிறது. இந்தத் தொழிற்சாலையில், இலகு ரக போர் ஹெலிகாப்டர்கள், இந்திய பல்நோக்கு ஹெலிகாப்டர்கள், உள்ளிட்டவையும் தயாரிக்கப்பட உள்ளன. திறன் படைத்த ஏற்றுமதி செய்யக்கூடிய சிவில் இலகு ரக போர் ஹெலிகாப்டர்கள் இங்கு எதிர்காலத்தில் உற்பத்தி செய்யப்பட உள்ளன.

இந்தத் தொழிற்சாலை, 3 முதல் 15 டன் வரம்பு கொண்ட, ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஹெலிகாப்டர்களை உற்பத்தி செய்து, 20க்கும் மேற்பட்ட ஆண்டுகளில் ரூ.4 லட்சம் கோடி மதிப்பிலான வர்த்தகத்தை செய்யத் திட்டமிட்டுள்ளது. துமகுருவில் இந்தத் தொழிற்சாலை அமைவதன் மூலம் நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்களை உருவாக்க உதவுவதோடு மட்டுமல்லாமல், இந்த பகுதியைச் சேர்ந்த மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் வித்திடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தத் தொழிற்சாலை விண்வெளி உற்பத்திக்கான சூழலை மேம்படுத்துவதுடன், பள்ளி, கல்லூரிகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளின் திறன் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை அதிகரிக்கும். அருகில் உள்ள பல்வேறு ஊராட்சிகளுக்கும், அங்கு வசிக்கும் மக்களுக்கும் மருத்துவம் மற்றும் சுகாதாரம் சென்றடையும் எனத் தெரிகிறது. இந்தத் தொழிற்சாலையை திறன்மிக்கமுறையில் இயக்குவதற்குத் தேவையான, ஹெலிகாப்டர் ஓடுதளம், வான்வழிப் போக்குவரத்து கட்டுப்பாட்டு தளம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களும் இங்கு உருவாக்கப்பட உள்ளன.

கடந்த 2016ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி இந்தத் தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டினார். ஹெலிகாப்டரை வடிவமைத்தல், அதன் மேம்பாடு மற்றும் உற்பத்தி என தற்சாற்பு இந்தியா என்ற பிரதமரின் தொலைநோக்கு பார்வையைப் பூர்த்தி செய்வதுடன், இறக்குமதி செய்யாமல், இந்தியாவின் ஹெலிகாப்டர் சார்ந்த ஒட்டுமொத்தத் தேவையையும் இந்தத் தொழிற்சாலை நிறைவேற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அண்மையில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், கர்நாடகா மாநிலத்தின் பத்ரா மேலணை திட்டத்திற்கு ரூ 5,300 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அறிவிப்பு வெளியிட்டிருந்தார். மேலும் கர்நாடகாவின் ரயில்வே திட்டங்களுக்கு ரூ.7,561 கோடி நிதி மத்திய அரசு ஒதுக்கி உள்ளது. இதனைத் தொடர்ந்து இந்தியாவின் மிகப் பெரிய ஹெலிகாப்டர் தொழிற்சாலையை பிரதமர் மோடி நாளை திறந்து வைக்கிறார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal