கடந்தாண்டு தமிழ்நாடு என அழைப்பிதழில் அச்சடித்த ஆளுநர் ஆர்.என்.ராவி, இந்தாண்டு பொங்களுக்கு ‘தமிழகம்’ என அச்சடித்திருப்பதுதான் ஆளும் கட்சியை அதிர வைத்திருக்கிறது.

தமிழக அரசுக்கும் ஆளுநர் ஆர் என் ரவிக்கும் இடையே வெளியே நடைபெற்று வந்த மோதல் தற்போது தமிழக சட்டப்பேரவைக்குள் எதிரொலித்துள்ளது. தமிழக ஆளுநர் ஆர் என் ரவி கடந்த சில நாட்களுக்கு முன்பாக காசி தமிழ்சங்கத்திற்கு ஏற்பாடு செய்த நிர்வாகிகளுக்கு பாராட்டு விழாவில் கலந்து கொண்டார். அப்போது விழாவில் பேசிய ஆளுநர் ஆர் என் ரவி, தமிழ்நாடு என்ற பெயருக்கு பதில் தமிழகம் என்பதே சரியாக இருக்கும் என்றும், ஆங்கிலேயர்கள் காலத்தில்தான் மாநிலங்கள் உருவாக்கப்பட்டன என்பதால் பாரதத்தின் பகுதி தமிழகம் என்பதுதான் சரி என கூறியிருந்தார். இதற்க்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தனர். குறிப்பாக ஆளுநரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

இந்தநிலையில் நேற்று தமிழக சட்டப்பேரவையில் உரையாற்றிய ஆளுநர் தமிழ்நாடு, அமைதிப்பூங்கா, சமூகநீதி, சுயமரியாதை,பெரியார், அண்ணல்அம்பேத்கர்,பெருந்தலைவர் காமராசர், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், திராவிட மாடல் ஆட்சி ஆகிய வார்த்தைகளை வாசிக்க மறுத்து அடுத்த பக்கங்களுக்கு சென்றார். இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்த முதலமைச்சர் ஸ்டாலின், ஆளுநர் உரைக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஆளுநர் சட்டப்பேரவை கூட்டத்தில் இருந்து பாதியில் வெளிநடப்பு செய்தார். இந்த சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவியின் பொங்கல் அழைப்பிதழ் அரசியல் கட்சிகளுக்கிடையே மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஆண்டு நடைபெற்ற சித்திரை திருநாள் விழாவிற்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவி என அச்சடிக்கப்பட்டிருந்தது. தற்போது அதாவது நாளை மறுதினம் நடைபெறவுள்ள பொங்கல் பண்டிகை அழைப்பிதழில் தமிழக ஆளுநர் என அச்சடிக்கப்பட்டு முக்கிய பிரமுகர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த அழைப்பிதழுக்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேஷன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ஆளுநர் மாளிகையில் இருந்து சித்திரை விழாவுக்கு வந்த அழைப்பில் “தமிழ்நாடு ஆளுநர்” என்று இருந்தது. இப்பொழுது பொங்கல் விழாவுக்கு வந்துள்ள அழைப்பில் “தமிழக ஆளுநர்”என்று இருக்கிறது.

அதே போல், கடந்த முறை வந்த அழைப்பிதழில் தமிழ்நாடு அரசின் இலட்சினை இருந்தது. இந்த முறை வந்துள்ள அழைப்பிதழில் மூன்று இடங்களிலும் இந்திய அரசின் இலட்சினை மட்டுமே இருக்கிறது. நமது இலட்சினையில் தமிழ்நாடு என்று எழுதப்பட்டுள்ளதால் அதனைப் பயன்படுத்த மறுத்திருப்பாரோ என்ற சந்தேகமும் எழுகிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal