ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என கூறி தந்தைப் பெரியார் திராவிடர் கழக நிர்வாகி தொடர்ந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

ஆரோவில் அறக்கட்டளையின் நிர்வாகக் குழு தலைவராக உள்ள தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, ஆதாயம் தரும் இரட்டைப் பதவி வகிப்பதால், எந்த தகுதியின் அடிப்படையில் ஆளுநர் பதவியில் நீடிக்கிறார் என விளக்கமளிக்க உத்தரவிடக் கோரி தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் கண்ணதாசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அந்த மனுவில், ஆரோவில் அறக்கட்டளை சட்டப்படி, தலைவர் பதவியில் நியமிக்கப்பட்டவருக்கு ஊதியம், படி, ஓய்வூதியம் உள்ளிட்டவை வழங்கப்படும் என்பதால் அவர் ஆதாயம் தரும் இரட்டை பதவி வகிப்பதாகக் கூறப்பட்டுள்ளது. இந்திய அரசியல் சாசனம் 158 (2) வது பிரிவின்படி, ஆளுநராக பதவி வகிப்பவர், ஆதாயம் தரும் இரட்டைப் பதவி வகிக்க கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதால், ஆரோவில் அறக்கட்டளை தலைவராக பொறுப்பேற்ற நாளில் இருந்து ஆர்.என்.ரவி, ஆளுநராக பதவியில் நீடிக்க தகுதியிழப்பு ஆகிறார் எனவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு, உச்ச நீதிமன்றம் மற்றும் பல்வேறு மாநில உயர் நீதிமன்றங்கள் பிறப்பித்த தீர்ப்புகளின்படி, இந்திய அரசியல் சட்டப்படி ஆளுநருக்கு சட்ட பாதுகாப்பு உள்ளதாகவும், நீதிமன்றங்களில் அவர்களுக்கு எதிராக வழக்கு தொடர முடியாது. மேலும், குடியரசுத்தலைவரோ, ஆளுநர்களோ நீததிமன்றங்களுக்கு பதில் சொல்ல கட்டுப்பட்டவர்கள் அல்ல. நீதிமன்றங்களுக்கு ஆளுநர் பதிலளிக்க அவசியமில்லை என்பதால், இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல எனக் கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal