மலைக்கோட்டை மாவட்டமான திருச்சி என்றாலே கே.என்.நேரு என்று சொல்லி வந்த நிலையில், திருச்சிக்கு வருகை தந்த அமைச்சர் உதயநிதி மற்றும் முதல்வருக்கு அன்பில் மகேஷின் தெற்கு மாவட்டம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது அனைவரையும் கவனிக்க வைத்திருக்கிறது.

‘துணை முதலமைச்சர் பதவிக்கு நிகரான பொறுப்பை உதயநிதி ஸ்டாலின் கையாண்டு வருகிறார்’ என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியிருப்பதுதான், அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

திருச்சியில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை வரவேற்று பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, உதயநிதியை துணை முதல்வருக்கு நிகராக உயர்த்தி பேசி அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார். சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை என்பது கிட்டதட்ட துணை முதல்வர் பதவிக்கு நிகரானது என அவர் தெரிவித்திருக்கிறார்.

இதன் மூலம் உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் மட்டுமல்ல அவர் துணை முதலமைச்சருக்கு நிகரானவர் என்பதை தெரிவித்துள்ளார். அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் இந்தப் பேச்சு அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்க்ப்படுகிறது. ஏனெனில் உதயநிதியை அமைச்சராக்க வேண்டும் என முதல் குரல் கொடுத்தவர் அன்பில் மகேஷ். இந்நிலையில் இன்று துணை முதல்வர் பதவி குறித்து முதல் முறையாக பேசியிருக்கிறார்.

இதேபோல் முதல்வர் ஸ்டாலினை வரவேற்று பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், ‘‘சென்னையில் அலுவல் கோட்டை இருந்தாலும் உங்களின் அன்புக் கோட்டை திருச்சி தான் எனக் கூறினார். ஆங்கில புத்தாண்டு பரிசாக திருச்சி மாவட்டத்துக்கு பல கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கியுள்ளதாக தெரிவித்தார். தங்களை பொறுத்தவரை முதல்வரின் வருகையால் இன்று முதலே புத்தாண்டு தான்’’ என அவர் குறிப்பிட்டார்.

உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வருக்கு நிகரான பொறுப்பை கையாள்வதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பேசிய போது முதல்வர் ஸ்டாலின் மௌனமாக கேட்டுக்கொண்டிருந்தார் என்பதுதான் குறிப்பிடத்தக்கது!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal