தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஸ்டாலின் 2021ம் ஆண்டு மே மாதம் பொறுப்பேற்றார். ஸ்டாலின் ஆட்சியமைத்தே போதே, அவரது மகனும், சேப்பாக்கம் – திருவ்வல்லிக்கேணி எம்.எல்.ஏ.வுமான உதயநிதியின் பெயர் அமைச்சர்கள் லிஸ்டில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவ்வாறு இடம்பெறாதது அவரது ஆதரவாளர்களை அதிருப்தியில் ஆழ்த்தியது. இதனிடையே, உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பொறுப்பு வழங்க வேண்டும் என மூத்த அமைச்சர்கள் தொடங்கி திமுகவினர் பலரும் வலியுறுத்தி வந்தனர். உதயநிதியை அமைச்சராக்கும் தீர்மானத்தை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நிறைவேற்றி, அடுத்தக்கட்ட நடவடிக்கையை கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடன்பிறப்புகள் தொடங்கினர்.

அதன் தொடர்ச்சியாக, உதயநிதி ஸ்டலினை அமைச்சரவையில் சேர்க்க முதல்வர் ஸ்டாலின் பரிந்துரைத்தார். அதன்படி, சென்னை ராஜ்பவனில் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதையடுத்து, ஆளுநர் மாளிகையில் ஆர்.என்.ரவியுடன் அமைச்சர்கள் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர். பதவியேற்ற பின்னர் செய்தியாளர்களை சந்தித்த உதயநிதி ஸ்டாலின், ”நிச்சயமாக விமர்சனங்கள் வரும், விமர்சனங்கள் வந்து கொண்டேதான் இருக்கும். என்னுடைய செயல்பாடுகள் அதற்கு பதிலாக இருக்கும்.” என்று தெரிவித்தார்.

இந்த நிலையில், தமிழக அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு ஊரக வளர்ச்சி துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் பெரியகருப்பனுக்கு கூட்டுறவுத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் ராமச்சந்திரனுக்கு சுற்றுலாத்துறையும், அமைச்சர் மதி வேந்தனுக்கு வனத்துறையும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதேபோல், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு கூடுதலாக, சிறப்பு திட்ட அமலாக்கம், வறுமை ஒழிப்புத்திட்டங்கள் மற்றும் ஊரக கடன்கள் துறை ஒதுக்கப்பட்டுள்ளது. அமைச்சர் சேகர்பாபுவுக்கு கூடுதலாக சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அமைச்சர் ஐ.பெரியசாமி வசம் இருந்த புள்ளியியல் துறை நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் ஆர்.காந்தி வசம் இருந்த கதர் மற்றும் கிராம தொழில் வாரியம், அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

By Divya