‘தி.மு.க.வில் உள்ள சீனியர்களை பின்னுக்குத் தள்ளிவிட்டு, உதயநிதியை முன்னுக்கு கொண்டு வந்திருப்பதுதான் திராவிட மாடலா?’ என கேள்வி எழுப்பியிருக்கிறார் அ.தி.மு.க.வைச் சேர்ந்த ராஜ்சத்தியன்!

திமுக அரசு பதவியேற்று சுமார் 20 மாதங்கள் முடிவடைந்த நிலையில், அமைச்சரவையில் உதயநிதிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக உதயநிதி பதவியேற்றுள்ளார். ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவிற்கு பின் குழு புகைப்படம் எடுக்கப்பட்டது. அப்போது முன் வரிசையில் உதயநிதிக்கு இடம் ஒதுக்கப்பட்டது. திமுகவில் மூத்த அமைச்சர்களாக இருப்பவர்கள் பின் வரிசையில் இருந்த நிலையில் உதயநிதிக்கு முன் வரிசை ஒதுக்கப்பட்டது விமர்சனத்தை உருவாக்கியது. இதனயைடுத்து தலைமை செயலகத்தில் உதயநிதிக்காக ஒதுக்கப்பட்ட அறையில் பொறுப்பை ஏற்றுக்கொண்ட அவர், 3 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார்.

இந்தநிலையில் அமைச்சரவையின் சீனியாரிட்டி அடிப்படையில் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில், முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அடுத்த படியாக அமைச்சர் துரைருகன், கே.என்.நேரு, ஐ. பெரியசாமி, பொன்முடி, எ.வ.வேலு, எம்ஆர்கே. பன்னீர் செல்வம், கே.கே.எஸ்.எஸ்.ஆர், தங்கம் தென்னரசு என இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்க்கு அடுத்தபடியான 10வது இடத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு சீனியாரிட்டி அடிப்படையில் இடம் வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து 11 மற்றும் 12வது இடங்களில் அமைச்சர்கள் ரகுபதி, முத்துசாமிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. எம்ஜிஆர் ஆட்சி காலத்தில் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த முத்துசாமிக்கு 12 வது ஒதுக்கப்பட்டிருப்பது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதற்க்கு அடுத்த படியாக பெரியகருப்பண், தாமோ.அன்பரசன், மு.பே.சாமிநாதன், கீதா ஜீவன், அனிதா ராதகிருஷ்ணன்,ராஜ.கண்ணப்பன் என இரண்டு முறைக்கும் மேல் அமைச்சர்களாக இருந்தவர்கள் பின் வரிசையை பிடித்துள்ளனர். இதனை அதிமுக, பாஜகவினர் விமர்சித்து வருகின்றனர்.

‘‘1985 முதல் அமைச்சராக இருக்கும் திரு.முத்துச்சாமி, நிதி அமைச்சராக இருக்கும் திரு பிடிஆர் போன்றவர்களை பின்னுக்கு தள்ளி அமைச்சரவை சீனீயாரிட்டி பட்டியலில் விளையாட்டுதுறை அமைச்சர் உதயநிதிக்கு முன்னுரிமை வழங்கப்பட்டிருப்பது எதன் அடிப்படையில்?’’ என அதிமுகவை சேர்ந்த ராஜ் சத்யன் கேள்வி எழுப்பியுள்ளார். இதே போல பல தரப்பினரும் உதயநிதிக்கு எந்த அடிப்படையில் முன்னுரிமை வழங்கப்பட்டிருப்பதாக கேள்வி எழுப்பியுள்ளனர்.

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தின் போது முதல் வரிசையில் இருக்கை ஒதுக்கப்பட்டும் அதில் 15 பேர் வரை அமரலாம் எனவே முன் வரிசையில் இடம் வழங்குவதற்காகவும், உதயநிதிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal