இன்று இரவு எட்டு மணிக்கு நேரலையில் தோன்றி நித்தியானந்தா பக்தர்களுக்கு அருளாசி வழங்க இருக்கிறார்!

சாமியார் நித்யானந்தா 3 மாத இடைவெளிக்கு பிறகு கடந்த 13-ந்தேதி குருபூர்ணிமா அன்று மீண்டும் நேரலையில் தோன்றி பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். அப்போது 3 மாதங்களாக தான் சமாதி நிலையில் இருந்தது பற்றி அவர் பக்தர்களுக்கு விளக்கினார். அவரது உடல்நிலை குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில் அவர் மீண்டும் நேரலையில் தோன்றி பேசியதால் அவரது சீடர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

அதேநேரம் அன்றைய தினம் சுமார் 3 மணி நேரம் ஆங்கிலத்திலும், தமிழிலும் அவர் உரையாற்றினாலும் அதில் பெரும்பாலும் நன்றி சொல்லும் விதத்திலேயே அமைந்தது. இந்நிலையில் இன்று இரவு 8 மணிக்கு மீண்டும் நித்யானந்தா நேரலையில் தோன்றி அருளாசி வழங்க இருப்பதாக அவரது அதிகாரப்பூர்வ வலைதள பக்கத்தில் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே சமூக வலைதளங்களில் நித்யானந்தாவின் புகைப்படம் மற்றும் அவர் பேசுவதுபோன்ற ஒரு வீடியோ பரவி வருகிறது. அதில் பின்னணி இசை ஒலிக்க நித்யானந்தா, மீண்டும் வந்துவிட்டேன்…, மீண்டு வந்துவிட்டேன்… என்ற வசனம் பேசுவது போல உள்ளது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal