சசிகலா, டி.டி.வி. தினகரன் இடையே விரிசல் ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின. அதனால்தான், அ.ம.மு.க.வினரும் குழப்பத்தில் இருந்து வந்தனர். இந்த நிலையில்தான் நேந்து இருவருக்குமான விரிசல் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.

சமீபத்தில்தான் சசிகலா ஆன்மிக சுற்றுலா சென்று வந்தார். அதன் பிறகு. சென்னையில் இருந்து தஞ்சாவூருக்கு சசிகலா அரசியல் பயணம் மேற்கொண்டு உள்ளார். நேற்று சசிகலா தனது கணவர் நடராஜனின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.நடராஜனின் நான்காம் ஆண்டு நினைவஞ்சலியை முன்னிட்டு சசிகலா நேற்று விளார் பைபாஸில் இருக்கும் நடராஜன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். இங்கு சசிகலா சார்பாக கோ பூஜை நடத்தப்பட்டது. அதோடு திருவருட்பா உள்ளிட்ட தமிழ் பாடல்கள் பாடப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வு முழுக்க சசிகலா மிகவும் உருக்கமாக காணப்பட்டார். பலமுறை கண்ணீர் விட்டவர், டிஷ்யு வைத்து முகத்தை துடைத்தபடி இருந்தார்.

இந்த நிகழ்விற்கு ஓ.பி.எஸ். தம்பி, ஓ.ராஜாதான் முன்னிலை வகித்தார். அதிகாலையே நினைவு இடத்திற்கு வந்த ஓ ராஜா அங்கு பூஜைக்கான ஏற்பாடுகளை செய்தார். அதேபோல் நடராஜன் நினைவிடத்தில் சசிகலா மலர் தூவிய போது ஓ ராஜாதான் பூக்களை எடுத்து கொடுத்தார். சசிகலாவின் நெருங்கிய சொந்தங்களை விட ஓ ராஜாதான் இந்த நிகழ்வில் அதிக முக்கியத்துவம் பெற்றார்.

இந்த நிகழ்விற்கு வந்துவிட்டு, நினைவிடத்தில் மரியாதை செலுத்திவிட்டு சசிகலா சென்ற பின்தான் அங்கு டிடிவி தினகரன் வந்தார். சசிகலா அதிகாலையே வந்து நடராஜன் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். ஆனால் டிடிவி தினகரன் 10 மணி அளவில்தான் நினைவிடத்திற்கு வந்தார். சசிகலாவை சந்திக்காமல் தவிர்க்கும் வகையில் டிடிவி தினகரன் லேட்டாக வந்துவிட்டு சென்றார். சசிகலா – டிடிவி இடையே அவ்வளவு நெருக்கமான உறவு இப்போது இல்லை என்பது வெட்ட வெளிச்சமாகிவிட்டது.

சட்டசபை தேர்தலுக்கு முன் அரசியலில் இருந்து சசிகலா விலகி இருப்பதாக அறிவித்தது டிடிவி விரும்பவில்லை. இதன்பின் இரண்டு பேருக்கும் இடையில் மனஸ்தாபம் இருந்ததாக கூறப்பட்டது. இருவரும் பெரிதாக அதன்பின் சந்தித்துக்கொள்ளவில்லை. இப்படிப்பட்ட நிலையில்தான் நேற்று இந்த குடும்ப நிகழ்வில் இருவரும் சந்திப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. இரண்டு பேரும் சந்திப்பார்கள். அதன்மூலம் இருவருக்கும் மனஸ்தாபம் தீரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், அப்படி எதுவும் நடக்காததால், அ.ம.மு.க.வினர் மீண்டும் குழப்ப நிலைக்கு திரும்பியிருக்கின்றனர்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal